நாளை மகாராஷ்டிராவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாபெரும் பேரணி: முதல்வரிடம் மனு
சென்னை: மகாராஷ்டிரா மாநில சிறைகளில் வாடும் அப்பாவி முஸ்லிம்களை விடுவிக்கக் கோரி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாளை அம்மாநிலத்தில் மாபெரும் பேரணியை நடத்துகிறது.
மகாராஷ்டிரா மாநில மைனாரிடி கமிஷன் சமீபத்தில் டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயன்ஸ் (டி.ஐ.எஸ்.எஸ்.) என்னும் நிறுவனத்தாரிடம், மகாராஷ்டிரா மாநில சிறைச்சாலைகளில் அடைபட்டுள்ள கைதிகள் குறிப்பாக முஸ்லிம் கைதிகள் பற்றிய விவரங்களைச் சேகரித்துத் தரும் பொறுப்பை ஒப்படைத்தது. அந்த நிறுவனத்தைச் சேர்ந்த கிரிமினாலஜி எனப்படும் குற்றச் சட்டயியல் மற்றும் நீதித்துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள் விஜய் ராகவன், ரோஸ்னி நாயர் இருவரும் அந்தப் பொறுப்பை ஏற்று, ஓராண்டு காலம் ஆய்வு நடத்தி அறிக்கை அளித்தனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 15 சிறைச்சாலைகளில் உள்ள முஸ்லிம் கைதிகளில் 70 சதவீதம் பேர் விசாரணைக் கைதிகள். இவர்களில் ஆண்கள் 64.5 சதவீதம்; பெண்கள் 5.2 சதவீதம் பேராவர். இவர்களில் 47.4 சதவீதம் பேர் மீது மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் 3.8 சதவீதம் பேர் மீதுள்ள வழக்குகள் மட்டுமே தீர்ப்பு கூறப்படும் அளவுக்கு வந்திருக்கிறது.
மகாராஷ்டிரா சிறைச்சாலைகளில் உள்ள மொத்த கைதிகளில் முஸ்லிம் கைதிகள் மட்டுமே 65.5 சதவீதம் பேர் உள்ளனர். இவர்கள் யாவரும் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாவர். இவர்களில் 58.2 சதவீதம் பேர் ஆரம்ப பள்ளிப் படிப்பு அளவு படித்துள்ளனர்; மீதமுள்ள 31.4 சதவீதம் பேர் எழுதப் படிக்கத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.
பெண் கைதிகளில் பெரும்பான்மையானவர்கள் வங்க தேசத்தைச் சேர்ந்தவர்கள். சிறையில் உள்ள 96 சதவீதம் முஸ்லிம் கைதிகளுக்கு எந்தவொரு தீவிரவாதக் கும்பலுடனோ, கிரிமினல் கும்பலுடனோ தொடர்பு எதுவும் இல்லை. 50 சதவீதம் பேருக்கு 2013ல் தண்டனை காலம் முடிகிறது. 38 சதவீதம் பேர் தாங்கள் கைதானதைத் தங்கள் குடும்பங்களுக்குத் தெரிவிக்க காவல்துறையினர் உதவவில்லை.
பல பேர், எந்தக் குற்றமும் செய்யாமல் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏதாவது ஒரு குற்றத்தைப் பார்த்ததாக சாட்சி சொல்ல முன்வராததாலும், ஒரு குடும்பத்தில் உள்ள ஒருவர் குற்றம் செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டால், அவருக்குப் பதிலாக அந்தக் குடும்பத்தில் உள்ள இன்னொருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறையில் வாடும் முஸ்லிம் கைதிகளுக்கு நியாயம் வழங்கக் கோரியும், அப்பிராணிகளை விடுவிக்க வேண்டியும் விதர்பா இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நாளை பிரமாண்டப் பேரணி நடத்தப்படுகிறது. இந்தப் பேரணியின் இறுதியில் அம்மாநில முதல்வரிடம் இது குறித்து மனு அளிக்கவுள்ளனர்.












Click it and Unblock the Notifications