பலாத்கார மாணவியின் உடல்நிலை கவலைக்கிடம்: முக்கிய உடல் உறுப்புகள் சேதம்!
6 பேர் கொண்ட கும்பலால் ஞாயிறு இரவு பலாத்காரம் செய்யப்பட்ட மருத்தவ மாணவி டெல்லி சரப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உயிருக்கு போராடி வருகிறார். அவருக்கு தற்போது செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.
இரும்பு தடியைக் கொண்டு தாக்கப்பட்டதில் அவரின் உடலில் முக்கிய உறுப்புக்கள் சேதமடைந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். நேற்று காலை அம்மாணவியின் உடல் நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில்,இரவில் மீண்டும் மோசமடைந்ததாக தெரிவித்துள்ளனர். உடம்பில் காயங்கள் ஏற்பட்டதோடு ரத்ததில் தொற்று எற்பட்டுள்ளது என்று கூறிய மருத்துவர்கள், இது மிகவும் கடுமையான மற்றும் வழக்கத்தில் இல்லாத 'மருத்துவ கேஸ்' என்றும் கூறியுள்ளனர்.
ஒருவர் தொடர்ந்து 72 மணி நேரத்திற்கு மேல் இத்தகைய நிலையில் இருந்தால் அவரது நுரையீரலில் தொற்று ஏற்பட்டுவிடும் என்றும், இந்நிலையில் அப்பெண்ணுக்கு செயற்கை சுவாச கருவிகள் பொருத்தப்பட்டு 65 மணி நேரத்திற்கும் அதிகமாகிவிட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
காயத்தினாலும் வலியினாலும் பாதிக்கப்பட்டுள்ள அந்த மாணவியின் வலியைப் போக்க அதிக அளவில் வலிநிவாரண மருந்து கொடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனினும் இன்னும் 48 மணிநேரத்தை கடந்தால் மட்டுமே அவரால் அபாயக்கட்டத்தை தாண்ட முடியும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
ஒருபுறம் குற்றவாளிகளை விரைவில் தண்டிக்க வேண்டும் என நாடு முழுவதும் குரல்கள் பலமாக ஒலித்துவரும் நிலையில்,மறுபுறம் பாதிக்கப்பட்ட அம்மாணவி உயிருக்கு போராடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.