கற்பழிப்பு பயம்: கத்தியும், பெப்பர் ஸ்ப்ரே கையுமாக திரியும் பெண்கள்
டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவில் ஓடும் பேருந்தில் மருத்துவப் படிப்பு படிக்கும் மாணவி ஒருவர் ஒரு கும்பலால் கற்பழிக்கப்பட்டார். அவரை காப்பாற்ற முயன்ற அவரது ஆண் நண்பர் தாக்கப்பட்டார். டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அம்மாணவியின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது.
இந்நிலையில் இரவு நேரம் வரை வேலை பார்க்கும் பெண்கள் தங்கள் கற்ப்பை காத்துக் கொள்ள கைப்பையில் கத்தியும், மிளகாய்த்தூள் ஸ்ப்ரேயும் எடுத்துச் செல்கின்றனர்.
டெல்லியைச் சேர்ந்த பூர்ணிமா சர்மா(55) கூறுகையில்,
ஒரு முறை சில ஆண்கள் ஒரு பெண்ணிடம் தவறாக நடிக்க முயன்றதைப் பார்த்தேன். உடனே அங்கு நின்று கொண்டிருந்த போக்குவரத்து போலீஸ் ஒருவரிடம் தெரிவித்து அப்பெண்ணை காப்பாற்றுமாறு கேட்டேன். ஆனால் அவர் அப்பெண்ணை காப்பாற்ற மறுத்ததுடன் உங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டு போங்கள் என்று என்னைத் திட்டினார். அவரது செயல் என்னை அதிர்ச்சி அடைய வைத்தது என்றார்.
சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், பெண்களின் நிலைமையைப் பார்த்தீர்களா. வீட்டை விட்டு கிளம்பி வேலைக்கு போகவே பலமுறை யோசிக்கின்றனர். இது சுதந்திர நாடா என்று சந்தேகமாக உள்ளது என்றார்.