போலியோ சொட்டு மருந்து முகாமில் தலிபான் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு: பாக்.கில் ஐவர் பலி
இஸ்லாமபாத்: பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் போலியோ சொட்டு மருந்து கொடுக்கச் சென்றவர்கள் மீது தலிபான் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலியாகியுள்ளனர்.
பாகிஸ்தானில் ஐந்து வயதுக்கு உட்பட்ட எண்ணற்ற குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு சொட்டு மருந்து அளிப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தப் பணிகளில் உலக சுகாதார அமைப்பின் பிரிவுகளூம் உதவுகின்றன.
நாடுமுழுவதும் பாதுகாப்பற்ற சூழ்நிலைகளில் இந்தக் குழுவினர் இயங்க வேண்டியுள்ளது.
இந்நிலையில் நேற்று பாகிஸ்தானின் சிந்து மாகாண தலைநகர் கராச்சியில் பல்வேறு பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி நடந்த போது. இதில் ஈடுபட்டிருந்த பெண்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். 3 இடங்களில் நடந்த தாக்குதல் சம்பவங்களில் 4 பெண்கள் கொல்லப்பட்டனர்.
தீவிரவாதிகளின் இதுபோன்ற நடவடிக்கைகளால் வடக்கு மற்றும் தெற்கு வஜிரிஸ்தான் பகுதிகளில் உள்ள 2.4 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ மருந்து கொடுக்க முடியவில்லை. அங்குமட்டும் 5 வயதிற்குட்பட்ட ஏராளமான குழந்தைகள் போலியோவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் திட்டத்தை அமெரிக்காவின் வேவு பார்க்கும் நடவடிக்கையாக தலிபான் தீவிரவாதிகள் கருதுகின்றனர். இதனால், வடமேற்கு பழங்குடியினர் பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து கொடுக்க பாகிஸ்தான் தலிபான் இயக்கத் தலைவர் ஹபீஸ் குல் பகதூர் தடை விதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications