சென்னை பேருந்தில் தீ .. பயணிகள் ஓட்டம்!
சென்னை: சென்னை வடபழனி அருகே அரசுப் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அச்சமடைந்த பயணிகள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.
சென்னை வடபழனியில் இருந்து குன்றத்தூருக்கு மாநகர போக்கு வரத்து கழக பேருந்து தடம் எண். எம்.88 இன்று காலை 12.30 மணிக்கு புறப்பட்டது.
பேருந்து கிளம்பிய சிறிது நேரத்திலேயே எஞ்சினில் இருந்து திடீரென்று கரும்புகை கிளம்பியது. உடனே ஓட்டுநர் பேருந்தை சாலையோரமாக நிறுத்தினார். உடனே பேருந்தில் இருந்த பயணிகளை இறங்குமாறு கண்டக்டர் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து பயணிகள் அலறியடித்து ஓடினர்.
உடனடியாக அருகில் இருந்த தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்குள் பேருந்து முழுவதும் தீ பிடித்து மளமள என்று எரிய தொடங்கியது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைப்பதற்குள் பேருந்து முழுவதும் கொழுந்து விட்டு எரிந்தது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், பேருந்தில் தீ பிடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications