இன்று 21 ..நான் உயிரோட இருக்கேன், நீங்களும் உயிருடன் இருக்கீங்களா...?!
சென்னை: இன்று டிசம்பர் 21ம் தேதி.அதாவது இன்று உலகம் அழியப் போவதாக சொல்லப்பட்ட நாள். இதை வைத்து ஏகப்பட்ட புரளிகள், புரட்டுக்கள், பிரசாரங்களைக் கிளப்பி விட்டது ஒரு கோஷ்டி உலகம் முழுவதும். ஆனால் இதுவரை உலகின் எந்த ஒரு மூலையிலும் உலகம் அழிந்ததாக தகவல் இல்லை... எனவே உலகம் மிக மிக பத்திரமாக இருப்பதாக நம்பலாம்.
மாயன் காலண்டர், 2012 டிசம்பர் 21ம் தேதியுடன் முடிவடைகிறது. இதை வைத்து அன்று உலகம் அழிந்து விடும் என பிரசாரங்கள் கிளம்பின. இதை வைத்து ஒவ்வொரு நாட்டிலும் விதம் விதமாக, கலர் கலராக வதந்திகளைக் கிளப்பி விட்டனர்.
ஹாலிவுட்டில் ஒரு படி மேலே போய் 2012 என்ற பெயரில் படமே எடுத்து வத்திக்குச்சியைக் கிழித்துப் போட்டனர். ஆனால் இன்று, அதாவது டிசம்பர் 21ம் தேதி, உலகம் எந்தவித பாதிப்பையும் சந்திக்காமல் படு பத்திரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

சென்னையில் வழக்கம்போல வண்டி ஓடுகிறது
சென்னையில் மக்கள் காலையில் வழக்கம் போல எழுந்து வேலைகளைப் பார்க்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் காலையில் கடைகளுக்குச் சென்ற மக்கள் தங்களுக்குள், என்னப்பா உலகம் இன்னிக்கு அழியப் போகுதுன்னாங்க, ஒன்னையும் காணோமே என்று கிண்டலடித்துக் கொண்டதைக் கேட்க முடிந்தது.

மதுரையும் பத்திரமாத்தான் இருக்காம்!
தமிழகத்தின் இதர பகுதிகளிலும் கூட இப்படித்தான் இன்றுகாலை எழுந்தவர்கள் பேசிக் கொண்டனர். மதுரை, கோவை, திருச்சி, நெல்லை என்று எல்லா ஊர்களிலும் காலையில் எழுந்ததும், நல்லவேளை நாம 'சாகலை' என்ற நல்ல 'வார்த்தை'யுடன்தான் மக்கள் பொழப்பைப் பார்க்கத் தொடங்கினராம்.

மெக்சிகோவில் களை கட்டிய பிரார்த்தனைகள்
மாயன் காலண்டர் பிறந்த மெக்சிகோவிலும் மக்கள் இன்று பெரும் ஆர்வம் மற்றும் எதிர்பார்ப்புடன் டிசம்பர் 21ம் தேதியை வரவேற்றனர். மாயல் காலண்டர் முடிந்த இன்றைய தினத்தை அவர்கள் புதிய சகாப்த்தத்தின் தொடக்க நாளாக கருதுகின்றனர். மேலும் இனி வரும் நாட்கள் நல்லபடியாக அமைய பிரார்த்தனைகளிலும் மக்கள் பெரும் திரளாக ஈடுபட்டுள்ளனர்.

நாசாவுக்கு வந்த ஆயிரக்கணக்கான அழைப்புகள்
உலகம் அழியப் போகிறது என்ற பீதி நெருங்க நெருங்க நாசாதான் பெரும் பாடுபட்டு விட்டதாம்.உலகம் நிஜமாகவே அழிந்து விடுமா என்று கேட்டு ஆயிரக்கணக்கான தொலைபேசி அழைப்புகள் நாசா தலைமையகத்திற்கு வந்து குவிந்து விட்டதாம். அதற்குப் பதில் சொல்லி மாள முடியாமல் போய் விட்டதாம் நாசா.

லண்டனில் பேய் மழை
உலகம் அழியப் போகிறது என்ற பீதியை மேலும் கூட்டும் வகையில் லண்டனில் நல்ல மழை பெய்து மக்களை பீதிக்குள்ளாக்கியது. கடும் மழையும், இருண்டு போய்க் கிடந்த வானமும் மக்களை பெரும் அச்சத்திற்குள்ளாக்கியதாம். இருப்பினும் எந்தவிதமான அழிவு நிகழ்ச்சிகளும் நடைபெறவில்லை என்பதை அறிந்து அப்பாடா தப்பி விட்டோம் என்ற நிம்மதியில் லண்டன்வாசிகள் உள்ளனர்.

பிரான்ஸில் வேடிக்கை பார்க்கக் குவிந்த மக்கள்
பிரான்ஸின் புகாரச் என்ற இடத்தில் மக்கள் பெருமளவில் நள்ளிரவில் குவிந்தனர். டிசம்பர் 21ம் தேதி பிறந்தவுடன் அவர்கள், நல்லவேளை உலகம் அழியவில்லை என்ற நிம்மதியுடன் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மாஸ்கோவில் நிம்மதி
ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவிலும் மக்கள் பெரும் நிம்மதியுடன் உள்ளனர். உலகம் அழியப் போகிறது என்ற பரவிய தகவலால் அங்கும் கூட பீதி காணப்பட்டது. இருப்பினும் இதுவரை எதுவும் நடக்காததால் ரஷ்ய மக்களும் நிம்மதியுடன் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாஸ்கோவில் இந்த நாளையொட்டி சிறப்பு கடைசி நடன நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனராம்.

உலகம் முழுவதும் சந்தோஷ நிம்மதி
உலகம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளி்ல மக்கள் நிம்மதிப் பெருமூச்சுடன் இருப்பதாகவே தகவல்கள் வந்து கொண்டுள்ளன. பலபகுதிகளில் பீதியைக் கிளப்பியபடி உலகத்திற்கு எந்த ஆபத்தும் வரவில்லை, கடவுள்தான் காப்பாற்றியுள்ளார் என்று பலரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி உள்ளனராம்.
இந்த நியூஸை எழுதி முடிக்கும் வரை உலகம் அழியவில்லை என்பதே லேட்டஸ்ட் நிலவரம்...!












Click it and Unblock the Notifications