ஓயாத போராட்டம்- போர்க்களமான ராஷ்டிரபதி பவன்! 7 முறை தடியடி- கண்ணீர்புகை குண்டுகள் வீச்சு!!
டெல்லி: டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து ராஷ்டிரபதி பவன் அருகே காலை முதல் மாலை வரை தொடர்ந்து போராட்டம் நீடித்தது. போராட்டத்தில் ஈடுபட்டோரை கலைக்க 7 முறை போலீசார் தடியடி நடத்தினர். கண்ணீர்புகைக் குண்டுகள் வீசப்பட்டன. இதனால் அப்பகுதியே போர்க்களமானது.
டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கி எறியப்பட்ட சம்பவம் நாட்டை உலுக்கியிருக்கிறது. இந்த சம்பவ்த்தில் ஈடுபட்ட நபர்கள் சிக்கியிருந்தும் அவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டோரை தூக்கிலிட வேண்டும் என்று ஒருதரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தைக் கண்டித்து சில நாட்களாக டெல்லி களேபரமாகி வருகிறது. இந்த களேபரத்தின் உச்சத்தை டெல்லி இன்று கண்டது. நாடாளுமன்றம், மத்திய அரசு அலுவலகங்கள், ராஷ்டிரபதி பவன் என பாதுகாப்பு மிகுந்த பகுதி இன்று போர்க்களமாகிப் போனது. டெல்லியில் காலையில் போராட்டாக்காரர்கள் விஜய் சவுக் பகுதியில் குவிந்தபோதே ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். இருப்பினும் யாரும் எதிர்பாராத வகையில் தன்னெழுச்சியாக போராட்டக்காரர்கள் திரள போலீசார் திணறினர்.

ராஷ்டிரபதி பவன் முற்றுகை
பலாத்காரத்தில் ஈடுபட்டோரை உடனே தூக்கில் போட வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக டெல்லியில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இன்றும் காலை 9 மணி அளவில் டெல்லி இந்தியா கெட் அருகே மாணவர்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்தியா கேட்டிலிருந்து ராஷ்டிரபதி பவன் நோக்கி போராட்டக்காரர்கள் முன்னேறினர். அவர்களைத் தடுத்து நிறுத்த முதலில் தண்ணீர் பீய்ச்ச்சி அடிக்கப்ப்ட்டது ஆனாலும் ராஷ்டிரபதி பவன் முன்பாக கூடிய அவர்கள், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கோரி முழக்கங்களை எழுப்பினர். ஒருசிலர் தடையை உடைத்துக் கொண்டு ராஷ்டிரபதி பவனுக்குள் நுழைய முயன்றனர். இதைத் தொடந்து போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. போலீசார் மீது கல்வீசப்பட்டது. இதனால் தடியடி அரங்கேறியது.

இந்தியா கேட் டூ ராஷ்டிரபதி பவன்
பின்னர் தொடர்ந்தும் இந்தியா கேட் அருகே குவிவதும் ராஷ்டிரபதி பவன் நோக்கி ஊர்வலமாக சென்று முழக்கமிடுவதுமாக காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருந்தது. இந்தப் போராட்டத்தில் டெல்லியைச் சேர்ந்த அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் கல்வி நிலையங்களைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மாணவ- மாணவிகள் மற்றும் ஆசிரியர்- ஆசிரியைகள், பேராசிரியர்கள், மாணவர்களும் கலந்து கொண்டனர். முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங் இந்தியா கேட் பகுதிக்கு வந்து மாணவ- மாணவிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். ராஷ்டிரபதி பவன் மட்டுமின்றி, டெல்லி ராஜபாதை, செங்கோட்டை, முன்பும் ஆயிரக்கணக்கில் மாணவ - மாணவிகள் திரண்டு இருக்கின்றனர். இதனால் நாடாளுமன்ற பகுதியே போர்க்களமாக காட்சி அளித்தது.

7 முறை தடியடி
மாலையானதும் எப்படியாவது அனைவரையும் அகற்றியாக வேண்டும் என்ற முடிவோடு போலீசார், கலவரத் தடுப்பு போலீசார், அதிரடிப்படை என அனைவரும் குவிக்கப்பட்டனர். அப்போது மீண்டும் தடியடி நடத்தப்பட்டு கண்ணீர்புகை குண்டுகள் வீசப்பட்டன, அனைவரும் இந்தியா கேட் நோக்கி நகர்த்தப்பட்டனர். இன்று ஒரே நாளில் 7 முறை போலீஸ் தடியடி நடத்திப் பார்த்தனர். கண்ணீர் புகை குண்டுகளையும் வீசியும் பார்த்தனர். மாலைவரை களேபரம் நீடித்த கதையாகத்தான் இருந்தது. போலீசார் தடியடி நடத்தி கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். ஆனால் போராட்டக்காரர்கள் நகருவதாக இல்லை. இரவு நேரம் ஆக ஆகத்தான் கூட்டம் பாதியாகக் குறைந்தது.

பல இடங்களில் போராட்டம்
டெல்லி ராஷ்டிரபதி பவன் அருகே மட்டுமின்றி பல இடங்களில் இதேபோன்ற போராட்டம் நடத்தப்பட்டது. சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெல்லியில் இன்று போராட்டத்தை நடத்தினர்.

கோரிக்கை
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டும் என்பதுதான் இன்றைய போராட்டக்காரர்களின் முழக்கமாக இருந்தது. இருப்பினும் பாலியல் பலாத்காரத்துக்கான தண்டனைக்கான சட்டங்களைக் கடுமையாக்க வேண்டும் என்பதுதான் போராட்டக்காரர்களின் ஒற்றை கோரிக்கையாக இருந்தது. இந்த கோரிக்கைக்காக இன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தன்னெழுச்சியான டெல்லி இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் வரலாற்றுப் போராட்டத்தை மாணவர்கள் நடத்தியிருக்கிப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications