பலாத்கார சம்பவம்- 3 பெண்களின் தந்தையான எனக்கும் கோபம்தான்: மன்மோகன்சிங்

டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாட்டை உலுக்கியிருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதிகோரி கடந்த சில நாட்களாக தலைநகர் டெல்லி போர்க்களமாக காட்சி அளிக்கிறது. தொடர்ச்சியான போராட்டங்களும் அதை ஒடுக்க போலீசார் கடும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து இன்று காலை தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய பிரதமர் மன்மோகன்சிங், நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. டிசம்பர் 16-ந் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு, நானும், எனது குடும்பத்தாரும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
3 பெண்களுக்கு தந்தை என்ற முறையில், இந்த கொடுமையான சம்பவத்தால் எனக்கும் கோபம் எழுகிறது. உங்களது வருத்தத்தில், நானும், எனது மனைவியும், குடும்பமும் பங்கு கொள்கிறது. இதுபோன்ற கொடுமையான குற்றத்தை செய்த குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை பெற்றுத் தருவதில் உறுதியாக இருக்கிறோம்.
சிகிச்சை பெற்று வரும் மாணவியின் உடல்நிலையை தொடர்ந்து அரசு கவனித்து வருகிறது. ஆனால், இந்த குற்றச்செயல்களுக்காக கோபம் ஏற்படுவது இயல்புதான். அதற்காக போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபடக் கூடாது. வன்முறை எந்த பிரச்னைக்கும் தீர்வாகாது. எனவே, வன்முறையைக் கைவிட்டு அமைதியை நிலைநாட்டுங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்..
முன்னதாக நேற்று இரவு பிரதமர் வெளியிட்ட அறிக்கையில், ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவி கடந்த ஞாயிறன்று கொடூரமாக கற்பழிக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது தொடர்பாக போராட்டம் நடத்தியவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே நடந்துள்ள மோதல்கள் கவலையளிக்கின்றது.
அந்த இளம்பெண்ணுக்கு டெல்லியில் ஏற்பட்ட இந்த கொடூரமான அனுபவத்திற்கு கண்டனம் தெரிவிப்பதில், நாம் அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம். இச்சம்பவத்தினால் ஏற்பட்டுள்ள கோபமும், ஆவேசமும் நியாயமானது. உண்மையானது. அந்த பெண்ணுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றோம்.
இந்த இக்கட்டான நேரத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்காகவும் அவருடைய அன்பிற்குரியவர்களுக்காகவும் நாம் பிராத்தனை செய்வோம். இவ்விவகாரத்தில் மக்கள் அனைவரும் அமைதிகாக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications