டெல்லி போராட்டம்- பிரதமர் உரையில் பாஜக அதிருப்தி- இன்று ஆலோசனை
டெல்லி: பாலியல் பலாத்கார சம்பவத்தில் நீதி கோரி தொடர் போராட்டங்கள் நடைபெறும் நிலையில் பிரதமர் மன்மோகன்சிங் அளித்த விளக்கத்தை பாரதிய ஜனதா கட்சி நிராகரித்திருக்கிறது. மேலும் இந்த விவகாரத்தில் அடுத்து மேற்கொள்ள என்ன செய்வது என்பது பற்றி பாஜக மூத்த தலைவர்கள் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர்.
பலாத்கார சம்பவத்துக்கு நீதி கோரி டெல்லியை போர்க்களமாக்கினர் மாணவர்கள்! இந்தியா கேட் பகுதியே களேபரபூமியானது. இதைத் தொடர்ந்து நேற்று இரவு பொதுமக்கள் அமைதி காக்க பிரதமர் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன் பின்னர் இன்று காலை நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலமும் உரையாற்றியிருந்தார். 3 பெண்களின் தந்தையான தமக்கு அனைவரையும்விட கோபம் அதிகம்தான் என்றும் கூறியிருந்தார்.
ஆனால் பிரதமர் மன்மோகன்சிங்கின் இந்த அறிக்கையை பாஜக நிராகரித்திருக்கிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாஜகவின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவதேகர், பிரதமர் மக்களின் கோபத்தைப் புரிந்து கொள்ளவில்லை. பிரதமரின் பேச்சில் எந்த ஒரு உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து பாஜகவின் மேலிடத் தலைவர்கள் இன்று இந்த விவகாரம் குறித்து விவாதிக்க இருக்கின்றனர். ஏற்கெனவே கற்பழிப்புக் குற்றங்களுக்கான சட்டத்தை கடுமையாக்குவது தொடர்பாக விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று பாஜகவின் மக்களவைத் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் வலியுறுத்தியிருந்தார். இன்றைய கூட்டத்தில் இது தொடர்பாகவும் விவாதிக்கப்படக் கூடும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications