மும்பையில் நேபாள பெண்ணை ஒரே நாளில் 3பேர் சிதைத்த கொடூரம்: இருவர் கைது
மும்பை: நேபாளத்தில் இருந்து கணவரைத் தேடி மும்பை வந்த இளம்பெண்ணை அடுத்தடுத்து மூன்றுபேர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதன்புராவில் உள்ள தொழிற்சாலையில் வேலைபார்த்து வந்த தமது கணவரைத் தேடி நேபாளத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் கடந்த வெள்ளியன்று மும்பை வந்தார். ஆனால் அவளது கணவர் மும்பையில் இல்லை என்றும் நேபாளத்துக்கே சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண், தொழிற்சாலை உரிமையாளரிடம் அனுமதி கேட்டு அங்கேயே தங்கினார்.
தனியாக இருந்த பெண்ணை தொழிற்சாலை உரிமையாளர் ஸூல்பிகார் ஷேக், பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கு வந்த பர்வேஸ் ஷேக் என்பவர் கணவரின் நண்பர் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, விடுதி ஒன்றுக்கு அந்தப் பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் அங்கு அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்தார். இதைத் தொடர்ந்து உறவினரின் நண்பர் எனக் கூறி அறிமுகமான மற்றொரு நபரும் அந்தப் பெண்ணைப் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனையடுத்து நாக்பாடா காவல்நிலையத்திற்கு சென்ற அந்த இளம்பெண், தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறியுள்ளார். இதனையடுத்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், ஸூல்பிகார் ஷேக், பர்வேஸ் ஷேக் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். மூன்றாவது நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
டெல்லியில், ஓடும் பேருந்தில் கல்லூரிப் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்கும் முன்னரே, மும்பையில் அதே போன்ற மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications