'வெண்ணிற ஆடை' மூர்த்தி காரில் பெட்ரோலுக்குப் பதில் டீசல் ... அதிரடியாக தொடங்கிய 2012!
ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு விதமாக தொடங்கும். பழைய ஆண்டுக்குப் பை பை சொல்லி விட்டு புதிய வருடத்தை புது உற்சாகத்தோடு தொடங்குவோம்.அந்த வகையில் 2012ம் ஆண்டும் இதோ விடை பெறப் போகிறது.
2011ம் ஆண்டு ஒரு வித நினைவுகளை நம்மிடம் விட்டுச் சென்றது என்றால் 2012ம் ஆண்டு நமக்கு பல மறக்க முடியாத நினைவுகளை விட்டு வைத்து விடை பெறவுள்ளது.
பசுபதி பாண்டியன் வெட்டிக் கொலை, தூத்துக்குடியில் கிளினிக்கில் பெண் டாக்டர் வெட்டிப் படுகொலை, ஜெயா டிவியிலிருந்து தினகரன் மனைவி அனுராதா நீக்கம், நில மோசடி வழக்கில் சென்னை கோர்ட்டில் உதயநிதி ஸ்டாலின் சரண், ஜெ குறித்த கட்டுரை தொடர்பாக நக்கீரன் அலுவலகம் மீது அதிமுகவிர் தாக்குதல், அதிமுக கொ.ப.இ.செ. பதவியிலிருந்து பழ. கருப்பையா நீக்கம், இந்து பத்திரிக்கை ஆசிரியர் பதவியிலிருந்து என்.ராம் விலகல் என பரபரப்பாகத்தான் தொடங்கியது இந்த வருடம்.

தூத்துக்குடியில் கிளினிக்கில் பெண் டாக்டர் வெட்டிப் படுகொலை
தூத்துக்குடியில் 50 வயதான பெண் டாக்டர் சேதுலட்சுமி என்பவரை அவரிடம் சிகிச்சை பெற வந்த ஆட்டோ டிரைவர் கிளினிக்கில் வைத்தே சரமாரியாக வெட்டிக் கொன்று பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஜெயா டிவியிலிருந்து தினகரன் மனைவி அனுராதா நீக்கம்!
சென்னை: ஜெயா டிவி நிர்வாகத்திலிருந்து டிடிவி தினகரனின் மனைவி அனுராதா நீக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகின.

நில மோசடி வழக்கில் சென்னை கோர்ட்டில் உதயநிதி ஸ்டாலின் சரண்
சென்னை போலீஸார் பதிவு செய்த நிலமோசடி வழக்கு தொடர்பாக சென்னை சைதாப்பேட்டை பெருநகர நீதிமன்றத்தில் முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனும், திரைப்படத் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் சரணடைந்தார். அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

கலைஞர் டிவி வாசல் படியைக் கூட என் மகள் மிதிச்சதில்லை.. ராசாத்தி அம்மாள்
சென்னையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பேசிய கனிமொழியின் தாயார் ராசாத்தி அம்மாள், கனிமொழிக்கு ஸ்பெக்ட்ரம் பற்றி ஒன்றுமே தெரியாது. அதேபோல் கலைஞர் தொலைக்காட்சியின் வாசலைக்கூட அவர் மிதித்ததில்லை என்று அவர் கூறி அனைவரையும் அதிரவைத்தார்.

1 லட்சம் பேருக்கு உணவு கொடுத்த நித்தியானந்தா
புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், புதுவையில் நித்தியானந்தாவின் ஆசிரமம் சார்பில் தினமும் 1 லட்சம் பேருக்கு உணவு சமைக்கப்பட்டு வினியோகிக்கப்பட்டது.

ஜெ குறித்த கட்டுரை: நக்கீரன் அலுவலகம் மீது அதிமுகவிர் தாக்குதல்!
ஜெயலலிதா குறித்த கட்டுரையுடன் வெளியான நக்கீரன் இதழைக் கொளுத்திய அதிமுகவினர், சென்னையில் உள்ள அந்த பத்திரிகையின் அலுவலகம் மீது கடும் தாக்குதல் நடத்தினர். 'மாட்டுக்கறி சாப்பிடும் மாமி நான்' என்ற தலைப்புடன் ஜெயலலிதா அட்டைப்படம் தாங்கி வெளியாகிய கட்டுரையே இந்த தாக்குதலுக்குக் காரணம்.

அதிமுக கொ.ப.இ.செ. பதவியிலிருந்து பழ. கருப்பையா நீக்கம்
அதிமுகவின் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் பதவியிலிருந்து பழ. கருப்பையா எம்.எல்.ஏ. திடீரென நீக்கப்பட்டார்.

இந்து பத்திரிக்கை ஆசிரியர் பதவியிலிருந்து என்.ராம் விலகல்
இந்து ஆங்கில நாளிதழின் தலைமை ஆசியரியரான என்.ராம் அந்தப் பதவியிலிருந்து விலகினார். மேலும் இந்து பதிப்பாளர், அந்தக் குழுமத்தின் பிற பத்திரிக்கைகளான பிஸினஸ் லைன், பிரண்ட் லைன், ஸ்போர்ட்ஸ்டார் ஆகியவற்றின் ஆசிரியர் பொறுப்புகளில் இருந்தும் அவர் விலகினார்.

பசுபதி பாண்டியன் சரமாரியாக வெட்டிப் படுகொலை
தமிழக தேவேந்திர வேளாளர் கூட்டமைப்பு என்ற தலித் அமைப்பின் தலைவரான பசுபதி பாண்டியன் திண்டுக்கல்லில் உள்ள அவரது வீட்டில் வைத்து ஒரு கும்பலால் கழுத்தை அறுத்தும், சரமாரியாக வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார்.

ராஜபக்சே தங்கை கணவர் ராமேஸ்வரம் கோவிலில் தாக்கப்பட்டார்
ராஜபக்சேவின் தங்கை நிரூபமாவின் கணவர் திருக்குமரன் நடேசன் தனது குழந்தைகளுடன் ராமேஸ்வரம் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தபோது அங்கு மதிமுகவினரும், நாம் தமிழர் அமைப்பினரும் இணைந்து முற்றுகைப் போராட்டம் நடத்தினர். அப்போது நடேசன் சரமாரியாக செருப்பால் தாக்கப்பட்டார்.

'வெண்ணிற ஆடை' மூர்த்தி காரில் பெட்ரோலுக்குப் பதில் டீசல் ஊற்றிய பங்க் ஊழியர்
புதுச்சேரிக்கு வந்த நகைச்சுவை நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பெட்ரோல் போடுவதற்காக பங்குக்குக் காருடன் போனபோது பெரும் சோதனையை சந்திக்க நேரிட்டு விட்டது. அதாவது பெட்ரோலுக்குப் பதில் பங்க் ஊழியர் டீசலை போட்டு நிரப்பி விட்டார்.

லத்திகா சரணை டிஜிபியாக நியமித்தது செல்லும்: உயர்நீதிமன்றம்
கடந்த திமுக ஆட்சியில் டி.ஜி.பி.யாக லத்திகா சரண் நியமிக்கப்பட்டது செல்லும். பதவி நியமனத்திற்கு மூப்பு நிலை மட்டுமே காரணம் அல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

த.வா.க.வைத் தொடங்கினார் வேல்முருகன்
பாமகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. வேல்முருகன் பொங்கல் திருநாள் அன்று தமிழர் வாழ்வுரிமை கட்சி என்ற புதிய கட்சியைத் துவங்கினார்.

சங்கரன்கோவில் இடைத் தேர்தல்-அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி
சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் எஸ்.முத்துச்செல்வி போட்டியிடுவார் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

இனி, நான் யாருக்கும் கட்டுப்பட மாட்டேன்- நடராஜன்
இனி, நான் யாருக்கும் கட்டுப்பட மாட்டேன், நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது என்று முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் தோழி சசிகலாவின் கணவர் நடராஜன் கூறினார். போயஸ் தோட்டத்திலிருந்து சசிகலா விரட்டியடிக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக இவ்வாறு அவர் கருத்து தெரிவித்தார்.

புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக்க உயர்நீதிமன்றம் தடை!
புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்ற மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெறப்பட வேண்டும். அது கிடைக்கும் வரை அப்பணிகளைத் தொடங்கக் கூடாது என்று கூறி புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றும் தமிழக அரசின் முடிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து விட்டது.

முன்னாள் டிஜிபி நட்ராஜ் டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமனம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி ஆர்.நட்ராஜ் நியமிக்கப்பட்டார்.

டாக்டர் நமது எம்.ஜி.ஆர். பதிப்பாளர் பொறுப்பிலிருந்து சசிகலா நீக்கம்
அதிமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான டாக்டர் நமது எம்.ஜி.ஆர். நாளிதழின் ஆசிரியராக கவிஞர் மருது அழகுராஜும், பதிப்பாளராக பூங்குன்றனும் நியமிக்கப்பட்டனர். இதுவரை பதிப்பாளராக சசிகலா இருந்து வந்தார். அவரை அதிமுகவிலிருந்து நீக்கிய செய்தி நமது எம்ஜிஆரில் வெளியானபோதும் சசிகலாதான் பதிப்பாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொலை வழக்கில் டாக்டர் ராமதாஸ் தம்பி சீனு கவுண்டர் கைது
2006ம் ஆண்டு அப்போதைய அதிமுக வேட்பாளர் சி.வி.சண்முகம் வீட்டுக்குள் புகுந்து முருகானந்தம் என்பவரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்த வழக்கில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் சகோதரர் சீனு கவுண்டர் எனப்படும் சீனிவாச கவுண்டரை சிபிஐ அதிகாரிகள் இன்று கைது செய்தனர்.

சசி அண்ணன், நடராஜன் தங்கச்சி அதிமுகவிலிருந்து நீக்கம்
அதிமுகவிலிருந்து மேலும் சில சசிகலா உறவினர்கள் தூக்கப்பட்டனர். அவர்களில் சசிகலா அண்ணன் சுந்தரவதனம் மற்றும் நடராஜனின் தங்கை வைஜெயந்தி மாலா ஆகியோரும் அடக்கம்.

என்.ஆர்.சிவபதி, முக்கூர் சுப்பிரமணியன் அமைச்சர்களானார்கள்
முதல்வர் ஜெயலலிதாவால் புதிய அமைச்சர்களாக அறிவிக்கப்பட்ட என்.ஆர்.சிவபதி மற்றும் முக்கூர் சுப்பிரமணியன் ஆகிய இருவரும் இன்று மாலை புதிய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

புயல் நிவாரண நிதிக்கு ஜெ.விடம் ரூ.10 லட்சம் கொடுத்த ரஜினி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் சந்தித்து தானே புயல் நிவாரண நிதிக்காக ரூ.10 லட்சத்திற்கான காசோலையை கொடுத்தார்.

7 மாதங்களில் 3வது துறை மாறிய கே.ஏ.செங்கோட்டையன்
அதிமுக ஆட்சி பதவியேற்று 7 மாதத்திற்குள் மூத்த அமைச்சரான கே.ஏ.செங்கோட்டையன் 3வது முறையாக துறை மாறினார். வருவாய்த்துறை அமைச்சராக அவர் இன்று நியமிக்கப்பட்டார்.

சட்டசபையிலிருந்து டி.ஆர்.பாலு மகன் ராஜா 10 நாள் சஸ்பெண்ட்!
முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் மகனும், திமுக சட்டசபை உறுப்பினருமான டி.ஆர்.பி.ராஜா, பத்து நாட்களுக்கு சட்டசபையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கடந்த சட்டசபைத் தொடரின்போது செல்போனில் அவை நடவடிக்கைளை வீடியோ எடுத்ததாக ராஜா மீது குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் இந்த விவகாரத்தை உரிமை மீறல் குழுவின் பரிசீலனைக்கு சபாநாயகர் ஜெயக்குமார் அனுப்பி வைத்தார்.












Click it and Unblock the Notifications