பயிரைக் காக்காவிட்டாலும், ஜெ. அரசு விவசாயிகளின் உயிரையாவது காப்பாற்றட்டும்: விஜயகாந்த்
சென்னை: அதிமுக அரசு பயிர்களைக் காக்காவிட்டாலும் விவசாயிகளின் உயிர்களையாவது காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் விவசாயிகள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்கின்றனர். இது எனக்கு அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. தமிழகத்தை காலங்காலமாக தஞ்சை தரணி தான் வாழ வைத்தது. ஆனால் இன்று தஞ்சையிலேயே வாழ முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
இந்தச் சூழ்நிலையில் விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.38,000 இழப்பீடு கேட்டனர். ஆனால் அரசின் சார்பில் எத்தகைய பதிலும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. அதனால் விவசாயிகள் தன்னம்பிக்கை இழந்து தற்கொலை செய்துகொள்கின்றனர். எனவே விவசாயிகளுக்கு தன்னம்பிக்கையை ஊட்டும் வகையிலும், மீண்டும் விவசாயத்தை அவர்கள் மேற்கொள்ளும் வகையிலும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்திக்கவோ, அவர்களின் குறைகளைக் கேட்டறியவோ முதல்வர் உள்பட எந்த அமைச்சர்களும் அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை. குடும்பத் தலைவரை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக ரூ.5 லட்சமாவது உதவித் தொகை வழங்க வேண்டும்.
பயிரைக் காக்க முடியாவிட்டாலும், உயிரைக் காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், எத்தகைய உயிர் இழப்புக்கும் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications