தூத்துக்குடி: பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மாணவி குடும்பத்துக்கு ரூ1 லட்சம் நிவாரணம்- ஜெ.

சென்னை: தூத்துக்குடியில் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மாணவி புனிதாவின் குடும்பத்துக்கு ரூ1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
புனிதா குடும்பத்துக்கு...
இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டம், கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சௌந்தரராஜன் என்பவரின் மகள் மாணவி புனிதா 20.12.2012 அன்று பாலியல் பலாத்கார முயற்சிக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டு உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரமடைந்தேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த மாணவி புனிதாவின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த மாணவி புனிதாவின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.
யானை தாக்கியோர் குடும்பத்துக்கு
இதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், டி.கொத்தனூர் தரப்பு, நார்த்தனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாப்பையன் என்பவரின் மகன் முனுசாமி 23.12.2012 அன்று ஓசூர் வட்டம், பார்த்தகோட்டா கிராமம் அருகே காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்; கோயம்புத்தூர் மாவட்டம், எட்டிமடை கிராமத்தைச் சேர்ந்த நடராஜ் என்பவரின் மனைவி ராமாத்தாள் 23.12.2012 அன்று சொரிமலை காப்புக் காடு அருகே காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். மரணமடைந்த முனுசாமி மற்றும் ராமாத்தாள் ஆகியோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களின் குடும்பங்களுக்கு வனத்துறை மூலம் தலா மூன்று லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்றும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications