டெல்லி போராட்டத்தில் மரணமடைந்த போலீஸ்காரர் குடும்பத்துக்கு அமிதாப் நிதியுதவி

டெல்லியில் மருத்துவ மாணவி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து கடந்த ஒருவாரகாலமாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதில் ஏற்பட்ட கைகலப்பில் சுபாஷ் சந்த் தோமார் என்ற போலீஸ்கார்ர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி அவர் பரிதாபமாக மரணம் அடைந்தார்.
அவரது குடும்பத்தாருக்கு ரூ.2½ லட்சம் நிதி உதவி அளிக்க அமிதாப்பச்சன் முடிவு செய்துள்ளார். நேற்று மும்பையில் நடந்த ஒரு விழாவில் தென்னிந்திய கல்வி சங்கம் அவருக்கு ரூ.2½ லட்சம் அளித்து கவுரவித்தது. இந்த தொகையை அவர் மரணம் அடைந்த போலீஸ்காரர் குடும்பத்துக்கு அளிக்க முடிவு செய்து உள்ளார்.
இது குறித்து பேசிய அமிதாப்,‘‘கடுமையாக தாக்கப்பட்டு, பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி குணம் அடைந்து வருகிறார் என்று நம்புகிறேன். அவரை நாசப்படுத்தியவர்களுக்கும், இதுபோன்ற கொடுஞ்செயலில் ஈடுபடுகிறவர்களுக்கும் கடுமையான தண்டனை அளிக்கும் வகையில் சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும்.
நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சரிபாதி பெண்கள். இந்த நாட்டின் பலமும் அவர்கள்தான் என்று நான் எப்போதும் சொல்லி வருகிறேன். சமுதாயத்தில் அவர்களுக்கு உரிய மரியாதையும், கவுரவமும் அளிக்கப்பட வேண்டும்'' என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications