ரயில் கட்டண உயர்வை தவிர்க்க முடியாது - மத்திய அரசு
சென்னை: ரெயில்வே துறையின் நிதி நிலை மோசமாக இருப்பதால், ரெயில் கட்டண உயர்வை தவிர்க்க முடியாது என்று மத்திய அரசு அறிவித்து வருகிறது.
ரெயில்வே பட்ஜெட்டில் பயணிகள் ரெயில் கட்டணத்தை கிலோ மீட்டருக்கு 5 முதல் 10 காசு வரை உயர்த்துவது பற்றி பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
பட்ஜெட்டிற்கு முன்பாகவே கட்டண உயர்வை அறிவிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், சதீஷ்கார் மாநில தலைநகர் ராய்ப்பூரில், ரெயில்வே துறை ராஜாங்க மந்திரி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் ரெயில் கட்டண உயர்வு தவிர்க்க முடியாது என்பதை மீண்டும் உறுதி செய்தார். அவர் மேலும் கூறுகையில், "பயணிகள் மற்றும் சரக்கு கட்டண உயர்வு பற்றி முடிவு செய்வதற்காக ரெயில் கட்டண ஒழுங்குமுறை ஆணையம் ஒன்று அமைக்கப்படுகிறது. இந்த ஆணையத்தின் அமைப்பு மற்றும் பொறுப்புகள் குறித்து மத்திய மந்திரிகள் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டவுடன் கட்டண உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகும். ரெயில்வே துறை ஏறத்தாழ ரூ.20 ஆயிரம் கோடி இழப்பில் செயல்பட்டு வருகிறது. இந்த துறையின் பொறுப்பு 16 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் காங்கிரசிடம் வந்து இருக்கிறது. இதுவரை ரெயில்வே துறை பிராந்திய துறைபோல் மாறி இருந்தது. இனிதான் அந்த துறைக்கு உண்மையான தேசிய அந்தஸ்தை கொடுக்க வேண்டும்," என்றார்.












Click it and Unblock the Notifications