மதுரையில் அதிமுக சுவர் விளம்பரங்கள் அழிப்பு: மிசா பாண்டியன் உள்ளிட்ட திமுகவினர் மீது வழக்கு
மதுரை: மதுரையில் உள்ள ஜெய்ஹிந்த்புரம் மார்க்கெட் சுவரில் எழுதப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விளம்பரத்தை அழித்தது தொடர்பாக திமுகவினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
புத்தாண்டையொட்டி நேற்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர்
மு.க. அழகிரி கூறுகையில், பிப்ரவரி மாதம் வரும் ஜெயலலிதாவின் பிறந்தநாள் சுவர் விளம்பரங்கள் இருக்கையில் ஜனவரியில் வரும் எனது பிறந்தநாள் சுவர் விளம்பரங்கள் மட்டும் அதிமுகவினரால் அழிக்கப்பட்டுள்ளது. அந்த விளம்பரங்களை அழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் கொடுத்துள்ளதோடு அதிமுகவின் சுவர் விளம்பரங்களையும் அழிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம். அவ்வாறு அழிக்காவிட்டால் திமுகவினரே அதை அழிப்பார்கள் என்றார்.
அவர் பேட்டி அளித்த அன்று இரவே 77வது வார்டில் உள்ள ஜெய்ஹிந்த்புரம் மார்க்கெட் சுவரில் இருந்த ஜெயலலிதா பிறந்தநாள் விளம்பரம் அழிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதி அதிமுக வட்ட செயலாளர் ராஜேந்திரன் இது குறித்து போலீசில் புகார் கொடுத்தார். அவர் தனது மனுவில், திமுக மாவட்ட பொருளாளரும், முன்னாள் துணை மேயருமான மிசா பாண்டியன், கோம்கார்ட் குமார், டிரைவர் முத்து, அனஞ்சி நாகேந்திரன், மாணிக்கம் ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டிருந்தார்.
அவரது புகாரின்பேரில் போலீசார் சுவர் விளம்பரம் அழிக்கப்பட்டது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications