மொட்டை மாடியில் மகள்களுடன் கண்ணாமூச்சி ஆடிய பெண் கீழே விழுந்து பரிதாப சாவு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் மொட்டை மாடியில் மகள்களுடன் கண்ணாமூச்சி விளையாடிய பெண் கால் தவறி கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி சங்கராபுரத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமி(எ) சதீஷ். அவருடைய மனைவி பத்மாவதி (35). கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான அவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். பத்மாவதி தனது மகள்களுடன் இரவு நேரத்தில் 3வது மாடியான மொட்டை மாடியில் கண்ணாமூச்சி விளையாடியுள்ளார்.
கண்ணில் துணியைக் கட்டிக் கொண்டு மகள்களைப் பிடிக்கச் சென்ற பத்மாவதி மாடியின் விளிம்பிற்கு சென்றபோது நிலை தடுமாறியதைப் பார்த்ததும் அவரது மகள்கள் அலறினர். ஆனால் அதற்குள் அவர் மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த அடிபட்டது. அவரது மகள்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் பத்மாவதியை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.