சாலை விபத்துக்களில் மதுரையில் தினசரி 6 பேர் பலியாகின்றனர்!!
மதுரை: சாலை விதிகளை மீறுவதால் மதுரையில் தினசரி சராசரியாக ஆறு பேர் உயிரிழக்கின்றனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. சாலை பாதுகாப்பு வாரவிழாவை ஒட்டி போக்குவரத்து அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட புள்ளிவிபரத்தில் இது தெரியவந்துள்ளது.
சாலை விதிகளைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் வகையிலும் ஆண்டுதோறும் ஜனவரி 1 முதல் ஜனவரி 7ம் தேதி வரை சாலை பாதுகாப்பு வார விழா கடைபிடிக்கப்படுகிறது.
ஒரு விஷயத்தை மக்களுக்கு உணர்த்த ஒரு குறிப்பிட்ட நாள் மட்டும் சிறப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. உதாரணமாக காதலர் தினம், புகையிலை தினம், எய்ட்ஸ் தினம். ஆனால் சாலை பாதுகாப்பு நாள் மட்டும் ஏழு நாட்கள் கடைபிடிக்கப்படுவதில் இருந்தே, அதன் முக்கியத்துவத்தை உணரலாம்.

மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு
பெரும்பாலான விபத்துக்கள் மது அருந்துவிட்டு வாகனம் ஓட்டுவதன் மூலமே ஏற்படுகிறது. எனவேதான் இந்த ஆண்டிற்கான சாலை பாதுகாப்பு வாரம் "மது அருந்தி வாகனம் ஓட்டுவதை ஜனவரி 1, 2013ம் தேதி மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தொடங்கியது.
விபத்து இல்லாமல் வாகனம் ஓட்டுவது குறித்து வாகன ஓட்டிகளிடம் எடுத்துரைக்கப்பட்டது. சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடப்படுவதன் அவசியம் குறித்து பேசிய மதுரை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் கே.நடராஜன் பேசியதாவது:
சாலை விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு தேவை. விதிமீறுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் மதுரை மாவட்டத்தில் 2010ம் ஆண்டில் சாலை விபத்தில் 120 பேர் இறந்தனர். 418 பேர் காயமடைந்தனர். 2011ல் 2,673 சாலை விபத்துக்களில் 576 பேர் பலியாகி உள்ளனர். 2174 பேர் காயமடைந்துள்ளனர். 2012ல் 2,890 சாலை விபத்துக்களில் 624 பேர் பலியாகி உள்ளனர். 2,430 பேர் காயமடைந்துள்ளனர். இதன்படி, 2011 ஆண்டில் நடந்த சாலை விபத்துக்களை விட 2012ல் 48 பேர் கூடுதலாக பலியாகி உள்ளனர்.

பொறுமை அவசியம்
பொறுமை, பிறரை மதித்தல், சகிப்புத்தன்மை, சாலையில் கவனம், பொறுப்புணர்ச்சி, தன்னம்பிக்கை, சாலை விதிகளை மதித்து செயல்படுதல், வாகனத்தை பற்றிய இயந்திர அறிவு உடையவராக டிரைவர் இருக்க வேண்டும். வாகனம் நேருக்கு நேர் மோதாமல் இருக்க, வேகத்தை குறைக்க வேண்டும். எதிர்வரும் வாகனத்திற்கு அதிகளவு இடைவெளி விட்டு வரவேண்டும். வாகனம் பக்கவாட்டில் மோதாமல் இருக்க, சாலை சந்திப்புகளில் வலது, இடது புறம் பார்த்து செல்ல வேண்டும்.

சரியான மனநலம் வேண்டும்
சாலையின் இடதுபுறம், வலதுபுறம் திடீரென திரும்பக்கூடாது. டிரைவரின் மனநலம், உடல்நலம் சரியாக இருக்க வேண்டும். போதை பொருட்களை அருந்தி வாகனம் ஓட்டக்கூடாது. சாலை சின்னங்கள், போக்குவரத்து சின்னங்கள் மற்றும் வரைகோடுகளை கவனித்து ஓட்ட வேண்டும். வாகனத்தை நல்லமுறையில் பராமரிக்க வேண்டும்.வாகனத்தை முந்தும் போது, எக்காரணத்தை முன்னிட்டும் மஞ்சள் கோட்டை கடக்கக்கூடாது. போக்குவரத்து விதிமுறைகளை டிரைவர்கள் நன்றாக தெரிந்து வைத்திருந்து விபத்தை தவிர்க்கும் வகையில் செயல்பட வேண்டும் இவ்வாறு கூறினார்.
இதேபோல் சாலை பாதுகாப்பு வார விழா தமிழ்நாடு முழுவதும் ஒருவாரகாலம் கடைபிடிக்கப்படுகிறது. ஆங்காங்கே விழிப்புணர்வு பேனர்கள் ஒட்டப்பட்டுள்ளன. பேருந்துகளில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. விபத்தில்லா பயணம்தான் பாதுகாப்பான பயணம் என்பதை அறிவுறுத்தவே சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications