எல்.பி.ஜி சிலிண்டரை கவனமா கையாளுங்க.. அலட்சியமாக இருந்தால் எப்பொழுதும் வெடிக்கலாம்!
சென்னை: சமையல் எரிவாயு சிலிண்டர் என்பது சமைப்பதற்கு மட்டும் பயன்படுவதில்லை. அதுவே சில சமயம் காலனாக மாறி உயிரைக் குடிக்கிறது. விறகு அடுப்பில் சமைத்தவர்கள் காலநிலை மாற்றத்தால் இன்றைக்கு கியாஸ் அடுப்பில் சமைக்கின்றனர். நெருப்பில் சமைப்பது என்னவோ ஒரே மாதிரியான விசயம்தான் என்றாலும் அதை பாதுகாப்பாக கையாளத்தெரியாமல் விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர். எனவே கியாஸ் சிலிண்டரை எப்படி உபயோகிப்பது என்பது பற்றி ஒவ்வொரு குடும்பத்தினரும் அறிந்திருக்க வேண்டும்.
தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் சிலிண்டர் வெடி விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. காஸ் சிலிண்டரை பயன்படுத்தும் போது கவனமாக இருந்தால் விபத்து ஏற்பட வாய்ப்பில்லை. பராமரிப்பில் கவனம் தவறினால் நம்மை பதம் பார்த்துவிடும்.
தற்போது அடிக்கடி நடைபெற்றுவரும் சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் இப்பொழுது பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. அடுப்பை எரிய விட்டப்படியே செல்வது... சோம்பேறித்தனமாக ரெகுலேட்டரை மூடாமல் வைப்பது போன்ற செயல்களை பெண்கள் கைவிட தொடங்கி உள்ளனர்.

தமிழ்நாட்டில் 586 பேர் பலி
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மட்டும் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து 586 பேர்வரை பலியாகி உள்ள தேசிய குற்றப்பிரிவு ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. தென் மாநிலங்களிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் சிலிண்டர் வெடித்து மரணம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் 10க்கும் மேற்பட்டோர் சிலிண்டர் வெடித்து பலியாகின்றனர் என்று அதிர்ச்சியளிக்கிறது அந்த புள்ளிவிபரம்.

சென்னையில் 96 விபத்துக்கள்
சென்னையில் மட்டும் 96 சிலிண்டர் விபத்துக்கள் ஏற்பட்டு 91 பேர் வரை உயிரிழந்திருக்கின்றனர். கடந்த ஆண்டு மாநிலம் முழுவதும் 632 விபத்துக்கள் நேர்ந்துள்ளன.

481 பெண்கள் பலி
சமையல் எரிவாயு சிலிண்டர் வெடி விபத்தில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். நாடு முழுவதும் 82 சதவிகித பெண்கள் உயிரிழக்கின்றனர். கடந்த 2011ம் ஆண்டு மட்டும் 481 பெண்கள் சிலிண்டர் வெடித்து உயிரிழந்துள்ளனர்.

கேரளாவில் 52 பேர் பலி
தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக ஆந்திராவில் 426 பேரும், கர்நாடகாவில் 386 பேரும் பலியாகியுள்ளனர். அதே சமயம் கேரளாவில் 52 பேர் மட்டுமே சிலிண்டர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

குஜராத்தில்தான் அதிகம்
நாட்டிலேயே குஜராத் மாநிலத்தில்தான் அதிக அளவாக 735 பேர் வரை உயிரிழந்துள்ளதாக புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. நாடு முழுவதும் நகர்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் சமையல் எரிவாயு உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே கவனமாக கையாண்டால் விபத்துக்கள் தவிர்க்கலாம் என்று ஆலோசனை கூறியுள்ளனர் எண்ணெய் நிறுவன அதிகாரிகள்.

காற்றோட்டமான அறை தேவை
காற்றோட்டமான பகுதியில், தரையில் இருந்து நின்ற நிலையிலேயே எப்போதும் சிலிண்டரை வைத்திருக்க வேண்டும். சிலிண்டர் மட்டத்தில் இருந்து உயரமான - சமமான இடத்திலேயே கியாஸ் அடுப்பை வைக்கவும் தனிப் பெட்டியிலோ அல்லது தரை மட்டத்தில் இருந்து பள்ளமான குழியிலோ சிலிண்டரை வைக்கக்கூடாது.

இரவில் நிறுத்துங்கள்
பிரிட்ஜ் போன்ற மின் சாதனங்களை சமையல் அறைக்குள் வைத்திருக்கக் கூடாது. அதனால் ஏற்படும் மின் அழுத்த ஏற்றத்தாழ்வு, கியாஸ் கசிவு இருக்கும் பட்சத்தில் விபத்தை உண்டாக்கக் கூடும். படுக்கைக்கு செல்லும் முன் சிலிண்டர் ரெகுலேட்டர் "நாப்"பை மூடிவிட்டு அடுத்ததாக அடுப்பின் "நாப்"களையும் மூட வேண்டும். பயன்பாடு இல்லாத நேரத்தில் சிலிண்டரின் "நாப்" எப்போதும் மூடிய நிலையிலேயே இருக்க வேண்டும்.

எப்படி பரிசோதிக்கலாம்
ரப்பர் டியூப், சிலிண்டர் வால்வின் உள்புறத்தில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கியாஸ் கசிவு தென்பட்டால் பாதுகாப்பு மூடியால் வால்வை மூட வேண்டும். சமையல் பொருட்கள் கொதித்து வெளியேறி தீயை அணைத்து விடும். இது கியாஸ் கசிவுக்கு வழி வகுக்கும். சிலிண்டரில் கசிவு இருப்பதை சோப்பு நீர் கொண்டே பரிசோதியுங்கள். எரியும் தீக்குச்சி மூலம் பரிசோதிக்கக் கூடாது.

அலட்சியமே காரணம்
விலை மதிப்பற்ற மனித உயிர் இழப்பை தவிர்க்க பாதுகாப்பான முறையில் சமையல் அறையை பெண்கள் கையாள வேண்டும். எண்ணை நிறுவனங்கள் சமையல் கேஸ் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் அவற்றை நாம் அலட்சியமாக கருதி பின்பற்றுவது இல்லை. அதனால்தான் உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன என்று இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications