புதுச்சேரி வந்த தாதர் எக்ஸ்பிரஸில் கிடந்தது வெடிகுண்டு அல்ல- நூல் கண்டுதான்!

மும்பையிலிருந்து இன்று காலை புதுச்சேரிக்கு தாதர் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தடைந்தது. பயணிகள் அனைவரும் இறங்கிய பின்னர் ரயிலை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது பெட்டி ஒன்றில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த சூட்கேசில் வினோத சப்தம் கேட்க அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அந்த சூட்கேஸ் மட்டும் தனியே எடுக்கப்பட்டு ரயில் நிலையத்தைவிட்டு தொலைவில் கொண்டு செல்லப்பட்டது.
பின்னர் வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பாதுகாப்பு சாதனங்களுடன் வந்தனர். அந்த சூட்கேசில் பந்துவடிவத்தில் ஒயர்களுடன் இணைக்கப்பட்டிருந்த பொருளை வெடிகுண்டு நிபுணர்கள் கைப்பற்றி சோதனை நடத்தினர். அப்போது போலீஸ் மோப்பநாய் வந்தாலும் எந்த உணர்ச்சியையும் அது வெளிப்படுத்தவில்லை.
இதைத் தொடர்ந்து கவச உடை அணிந்த வெடிகுண்டு நிபுணர் ஒருவர் அப்பொருளில் இருந்த ஒயர்களை அனைத்தையும் துண்டித்தார். அதன்பிறகு வெடிகுண்டு போன்ற பொருளை மட்டும் தனியாக பிரித்து எடுத்து உப்பளம் மைதானத்துக்கு கொண்டு சென்றனர். அந்தப் பொருளை கீழே தூக்கி வீசியபோது அதிர்ச்சி காத்திருந்தது. அப்பொருள் வெடிக்கவே இல்லை. பின்னர் கம்பால் அடித்தும் பார்த்தனர்.
சந்தேகம் வந்ததும் அந்தப் பொருளை கையில் எடுத்துப் பார்க்க பேரதிர்ச்சிதான் கிடைத்தது. ஒரு நூல்கண்டுக்கு சிவப்பு பெயிண்ட் அடித்து வெடிகுண்டு போல் உருவாக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதனால் புதுச்சேரியில் 2 மணிநேரம் நீடித்த பரபரப்பு அடங்கியது.












Click it and Unblock the Notifications