பட்ஜெட் தொடருக்கு முன்பு 3-வது அணி உதயம்: சீதாராம் யெச்சூரி
தன்பாத்: காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகளுக்கு மாற்றாக 3-வது அணி விரைவில் உருவாகும் என்று மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சீதாராம் யெச்சூரி, லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளுக்கு பெரும்பான்மை கிடைக்காது. இந்த கட்சிகளுக்கு மாற்றாக விரைவில் 3-வது அணி உருவாகும். இதில் சமாஜ்வாடி கட்சி முக்கிய அங்கம் வகிக்கும். வருகிற பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாகவே 3-வது அணி உருவாகி விடும்.
3-வது அணி சார்பில் மும்பை, கன்னியாகுமரி, அமிர்தசரஸ், கொல்கத்தா ஆகிய நகரங்களில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும். இதுதொடர்பாக டெல்லி ராமலீலா மைதானத்தில் மார்ச் மாதம் 19-ந் தேதி கூட்டம் ஒன்று நடத்தப்படும்.
கடந்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்தது. ஆனால் இந்த விவகாரத்தில் தற்போது பாரதிய ஜனதா கட்சி எங்கள் பக்கம் இருக்கிறது. இதனால்தான் 2 கட்சிகளும் சந்தர்ப்பவாத அரசியல் நடத்துகின்றன என்று விமர்சிக்கிறோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications