அரையாண்டுத் தேர்வில் மார்க் குறைந்ததால் 2 மாணவிகள் விஷம் குடித்து தற்கொலை
சேலம்: சேலத்தில் அரையாண்டுத் தேர்வில் மதிப்பெண் குறைவாக வாங்கியதால் 8 மற்றும் 9ம் வகுப்பு மாணவிகள் 2 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள கிழக்கு ராஜாபாளையத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகள் கார்த்திகா(14). கெங்கவல்லி நேஷனல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த சின்னசாமி மகள் பாரதி(13). கார்த்திகா படித்த பள்ளியில் 8ம் வகுப்பு படித்தார். கார்த்திகாவும், பாரதியும் தோழிகள்.
இந்நிலையில் நேற்று பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த தோழிகள் இருவரும் விளையாடச் சென்றனர். ஆனால் இருட்டியும் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த பெற்றோர் அவர்களை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது அங்குள்ள மாரியம்மன் கோவில் பின்புறத்தில் கார்த்திகா பிணமாகவும், பாரதி வாயில் நுரை தள்ளி உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பாரதியை ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டார்.
அரையாண்டுத் தேர்வில் அவர்கள் இருவரும் குறைவான மதிப்பெண்கள் வாங்கியதால் தான் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மாணவிகளின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications