கைதிகள் நலனை முன்னிட்டு பிப்ரவரி 9ம் தேதி முதல் காயின் போன் போன் பூத் அறிமுகம்!
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய சிறைகளிலும் காயின் போட்டு பேசும் தொலைப்பேசி பூத்கள் வரும் பிப்ரவரி மாதம் 9ம் தேதிக்குள் அமைக்கப்படும் என்று சிறைத்துறை இயக்குனர் திரிபாதி தெரிவித்துள்ளார்.
பல்வேறு சிறைகளில் அவ்வப்போது நடத்தப்படும் சோதனையின்போது கைதிகளிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. தொலைப்பேசி வசதி இல்லாததால் தான் கைதிகள் திருட்டுத்தனமாக செல்போன் வைத்துள்ளனர் என்பதை உணர்ந்தனர் அதிகாரிகள்.
இதையடுத்து தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளில் உள்ள கைதிகள் தங்கள் குடும்பத்தாருடன் பேச வசதியாக ஒரு ரூபாய் நாணயம் போட்டு பேசும் தொலைப்பேசி பூத்களை அமைக்க சிறைத்துறை முடிவு செய்தது.
இந்த காயின் போன் பூத்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய சிறைகளில் வரும் பிப்ரவரி மாதம் 9ம் தேதிக்குள் அமைக்கப்படும் என்று சிறைத்துறை இயக்குனர் திரிபாதி தெரிவித்துள்ளார்.

மத்திய சிறைகள்
தமிழகத்தில் சென்னை புழல், கடலூர், வேலூர், சேலம், திருச்சி, மதுரை, பாளையங்கோட்டை, கோவை ஆகிய இடங்களில் மத்திய சிறைகள் உள்ளன. இந்த சிறைகள் அனைத்திலும் காயின் செல்போன் பூத்கள் அமைக்கப்படுகிறது.
கண்ட இடத்தில் செல்போனை ஒளித்து வைக்கும் கைதிகள்
தொலைபேசி வசதி இல்லாததால் கைதிகள் சிறை அதிகாரிகளின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு தங்களை பார்க்க வருபவர்களிடம் இருந்து செல்போன்களை வாங்கி வைத்துக் கொள்கின்றனர். அதிகாரிகள் சோதனைக்கு வந்தால் செல்போனை கண்ட இடத்தில் எல்லாம் மறைத்து வைக்கின்றனர்.

திருட்டுத்தனமாய் சப்பாத்தி சுட்ட கைதிகள்
சேலம் மத்திய சிறையில் அதிகாரிகளுக்கு தெரியாமல் மாவை வரவழைத்து அடுப்படியில் திருட்டுத்தனமாக சப்பாத்தி சுட்ட 7 கைதிகள் சிக்கினர். சப்பாத்தி செய்யத் தேவையான பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தபோது அவர்கள் சிறை சுவர் மீது ஏறி நின்று தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காயின் பூத் வந்தால் திருட்டு செல்போன் ஒழியுமா?
காயின் தொலைபேசி பூத் அமைக்கப்பட்ட பிறகாவது கைதிகள் திருட்டுத்தனமாக செல்போன் பயன்படுத்துவதை நிறுத்துவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications