ராமநாதபுரம், மதுரையைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டத்திலும் ராமதாஸ் நுழைய தடை கோரி மனு

சாதி சங்கங்களை ஒருங்கிணைப்பு தலித் மக்களை விமர்சித்து பேசிவரும் டாக்டர் ராமதாஸ், ராமநாதபுரம் மாவட்டத்துக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் மதுரை மாவட்டத்திலும் பிப்ரவரி 21-ந் தேதி வரை நுழைய தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இது தொடர்பாக நோட்டீஸ் ஒன்றும் ராமதாஸுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இந்த நோட்டீஸை ராமதாஸ் வீட்டில் இருப்போர் வாங்க மறுத்துவிட்டனர். இதைத் தொடர்ந்து அவரது வீட்டு சுவற்றில் மதுரை மாவட்ட ஆட்சியரின் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான கூட்டமைப்பு சார்பில் ஈரோட்டில் இன்று மாவட்ட கலெக்டரிடம் ஒரு மனு கொடுக்கப்பட்டது. அம்மனுவில், ராமநாதபுரம், மதுரை மாவட்டங்களைத் தொடர்ந்து ஈரோட்டிலும் சாதி சங்கங்களை ஒன்றிணைத்து போராட்டம் நடத்தப் போவதாக ராமதாஸ் கூறியுள்ளார். அவரால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் அவர் மாவட்டத்தில் நுழைவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆட்சியர் விளக்கம் இதனிடையே மதுரை மாவட்டத்துக்குள் நுழைவதற்கு பாமக தலைவர் ராமதாஸுக்கு தடை மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது; அவர் மீது வழக்கு எதுவும் பதியப்படவில்லை என்று மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா விளக்கம் அளித்திருக்கிறார்.
மேலும் ராமதாஸ் அனைத்து சமுதாயப் பேரவை கூட்ட நிகழ்ச்சிகளுக்கு மட்டுமின்றி எந்தக் கட்சிக் கூட்டங்களிலும் கலந்து கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமதாஸைப் போல் எந்தத் தலைவராவது பொது அமைதியைக் குலைக்கும் வகையில் நடந்து கொண்டாலும் இத்தகைய உத்தரவுகள் அவர்களுக்கும் பொருந்தும். ஆனால் சாதிய அமைப்புகள் மாநாடுகள் நடத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை என்றார் அவர்.












Click it and Unblock the Notifications