காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட பிரதமர் முடிவு

காவிரி நீர் பங்கீடு பிரச்சினை பற்றி விசாரணை நடத்திய நடுவர் மன்றம் கடந்த 2007-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந் தேதி தனது இறுதி தீர்ப்பை வழங்கியது. ஆனால் அந்த தீர்ப்பை மத்திய அரசு இன்னும் அரசிதழில் வெளியிடவில்லை. அரசிதழில் வெளியிட்டால் தான் அது அமலுக்கு வரும்.இதனால் நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டு அமல்படுத்த வேண்டும் என்று கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது. இதே போல் கேரளா, புதுச்சேரி அரசுகளும் வழக்கு தொடர்ந்து உள்ளன. ஆனால் இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிடக்கூடாது என்று கர்நாடகம் ஒரு மனு தாக்கல் செய்து உள்ளது.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் 7&ந் தேதி கூடிய காவிரி கண்காணிப்பு குழு கூட்டத்தில் நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை டிசம்பர் மாத இறுதிக்குள் அரசிதழில் வெளியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது. பின்னர் இது பற்றி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் உறுதி அளித்தது. ஆனால் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
இதற்காக, கடந்த 4-ந் தேதி மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவது பற்றி வருகிற 31ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் கட்டளையிட்டது. அதற்கு முன்னதாக ஜனவரி 11ம் தேதிக்குள் காவிரி கண்காணிப்பு குழு கூடி டிசம்பர் வரையில் தமிழ்நாட்டுக்கும் கர்நாடகத்துக்கும் எவ்வளவு தண்ணீர் தேவை என்று கணக்கிட்டு அறிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இந்த நிலையில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி காவிரி கண்காணிப்பு குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக அரசு அதிகாரிகள் தங்கள் தரப்பு கோரிக்கைகளை முன்வைத்தனர். தொடர்ந்து காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசிதழில் உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடுவது தொடர்பான தமிழக அரசின் கோரிக்கையை புதுச்சேரி மற்றும் கேரள மாநில அரசுகளும் வலியுறுத்தின.
இந்த பிரச்சினையில் கர்நாடக அரசின் இறுதி நிலைப்பாடு குறித்து 2 நாளில் தெரிவிக்க வேண்டும் என்றும் காவிரி கண்காணிப்பு குழு தலைவர் டி.வி.சிங் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டார். அதற்கு கர்நாடக அரசின் தலைமைச்செயலாளர், இந்த பிரச்சினையில் கர்நாடக அரசின் நிலை என்ன? என்பதை 2 நாளில் கேட்டு தெரிவிப்பதாக கூறினார்.
பிரதமர் ஆதரவு
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே, காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிடக்கூடாது என்று பிரதமர் மன்மோகன்சிங்கிடம் கூறினார். அதற்கு பிரதமர் மன்மோகன்சிங், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றாமல் இருக்க முடியாது என்று கூறினார். நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவது பற்றி தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும் இது பற்றி விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications