திமுகவின் நம்பர் 2வாக உருவெடுக்கும் "மு.க.கனிமொழி"!

திமுகவில் கருணாநிதி குடும்பத்தில் மு.க.ஸ்டாலின் என்ற நிலைமை மாறி அழகிரி, கனிமொழி என பட்டியல் நீண்டது. திமுக ஆட்சிக் காலத்தில் கருணாநிதியின் குடும்பத்தினர் ஒவ்வொருவரும் ஒரு அதிகார மையமாக விளங்கினர். இந்த அதிகார மையங்களில் கனிமொழியும் முக்கியமானவர். ஆட்சி பறிபோன நிலையில் கட்சியில் தமக்கான ஆதரவை உருவாக்குவதில் முனைப்பு காட்டினார். இதற்கு அவர் எடுத்த அஸ்திரம், திமுகவின் அடிப்படை கொள்கைக்கே எதிரான' சாதி' என்பதுதான் சோகம்!
கனிமொழிக்காக களம் இறங்கிய சாமி
திமுகவில் ஸ்டாலின் மற்றும் அழகிரி ஆகியோருக்கு ஆதரவு கோஷ்டி இருக்கையில் கவிஞரான கனிமொழிக்கு அப்படி ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படியான ஆதரவாளர்கள் கிடைக்கவில்லை. தலைவரின் மகள் என்ற பார்வைதான் இருந்ததே தவிர அவரை செயல்படக் கூடிய ஒரு தலைவராக திமுகவினர் கருதவில்லை. கனிமொழிக்கு சாதி பற்று இருக்கிறது அல்லது இல்லை என்ற விவாதத்துக்கு அப்பால் கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாளின் 'நாடார்' சமூக பாசம் பட்டவர்த்தனமானது. பகிரங்கமாகவே சாதி சார்பு விழாக்களில் அவர் கலந்து கொள்வதில் தயக்கம் காட்டியதில்லை. இதனால் 'திமுக நாடார்'களை ஓரணியில் திரட்டினால் அதுவே கனிமொழிக்கான கோஷ்டியாகிவிடும் என்று கணக்குப் போட்டுத்தான் சென்னையில் நாடார்கள் அதிகம் வசிக்கும் வடசென்னையில் கேபிபி சாமி அடையாளம் காட்டப்பட்டார். கனிமொழியின் தீவிர விசுவாசியாக அவர் களமிறக்கப்பட்டார்.
சாமிக்காக 'களமாடிய' கனிமொழி
திமுகவில் கனிமொழிக்கென கோஷ்டி வடசென்னையில் மையம் கொண்ட நேரத்தில்தான் ஸ்பெக்ட்ரம் வழக்கில் அவர் சிறைக்குப் போனார். அவரது ஆதரவாளரான கேபிபி சாமியும் அவரது குடும்பத்தினரும் ஒட்டுமொத்தமாக கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டனர். திகாரிலிருந்து விடுதலையான கனிமொழி சிறைக்குப் போய் கேபிபி சாமியை நேரில் சந்தித்ததார். மேலும் கனிமொழியின் வலியுறுத்ததால்தான் திமுக வழக்கறிஞர்கள் கூட்டம் கூட்டப்பட்டு கைது செய்யப்பட்டவர்களின் வழக்குகளை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரங்களைச் சேகரிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
ஓரம் கட்டப்பட்ட அழகிரி- இடம் பிடித்த கனிமொழி
இந்த நிலையில் திமுகவில் மு.க.ஸ்டாலின் கை ஓங்கிக் கொண்டிருக்க கருணாநிதி அவருக்கு பச்சைக் கொடி காட்ட கனிமொழி ஒரு முடிவு எடுத்தாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். கருணாநிதி குடும்பத்தில் மு.க.ஸ்டாலின் கோஷ்டியில் ஏற்கெனவே தயாநிதி இருக்கிறார். தற்போது அழகிரியின் கூடாராம் காலியாகிவிட்டது. இந்த நேரத்தில் ஸ்டாலினுடன் இருந்தால் திமுகவின் நம்பர் 2 இடம் எப்படியும் நமக்குத்தான் என்று கணக்கிட்டுத் தான், ஸ்டாலினுக்கு ஆதரவை வெளிப்படுத்தினாராம் கனிமொழி.
சிஐடி காலனியில் ஸ்டாலின்
கனிமொழியின் பிறந்த நாளில் பொதுவாக கட்சியினர் அதிகம் பங்கேற்பது இல்லை. இம்முறையோ கருணாநிதி, ஸ்டாலின் போல கழகப் பிரமுகர்கள் பலரும் அவரது சிஐடி காலனிக்குப் படையெடுக்க அப்பாடா நம்பர் 2 நமக்குத்தான் என்ற நிம்மதியில் இருக்கிறாராம் கனிமொழி. வழக்கத்துக்கு மாறாக காலையிலேயே திமுக பிரமுகர்கள் சி.ஐ.டி. காலனி வீட்டை நோக்கி வர ஆரம்பித்தனர். ஸ்டாலின் சிஐடி காலனி வீட்டுக்குள் வரும்போது, கருணாநிதி அங்கு இருந்து கிளம்பியிருந்திருக்கிறார். ஸ்டாலினைப் பார்த்ததும் அவருடனேயே மறுபடியும் உள்ளே வந்து இருவரையும் தனக்கு முன்னால் நிறுத்தி அன்புப் பரிசுகளை வழங்க வைத்துள்ளார் கருணாநிதி. இதெல்லாம் அக்காதான் நம்பர் 2 என்பதைத்தான் சொல்கிறது என்கின்றனர் அவரது ஆதரவு உடன்பிறப்புகள்
நிகழ்ச்சி ரத்து- நெகிழ்ச்சியில் ஸ்டாலின்
கனிமொழியின் பிறந்த நாளன்று நேரடியாக ஸ்டாலின் சென்று வாழ்த்தியதும் ராசாத்தி அம்மாளின் பரிவான பேச்சும் திமுகவினரை மகிழ்ச்சியில் திளைக்க வைத்ததாம். அத்துடன் அவர் இன்னொரு வேலையையும் செய்து ஸ்டாலின் மனதை வென்றிருக்கிறார். திருவொற்றியூரில் கனிமொழியின் பிறந்தநாள் பொதுக் கூட்டம் நடைபெற இருந்தது. அதில் கனிமொழி கலந்து கொண்டு நலத் திட்ட உதவிகளை வழங்க இருந்தார். ஆனால் அதே நாளில் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி ஆலோசனை கூட்டத்தில் மு..க. ஸ்டாலின் கலந்து கொள்ளத் திட்டமிட்டிருந்தார். ஒரே நாளில் ஒரே நேரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவரும் வெவ்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் போட்டிக்குப் போட்டியாகிவிடும் என்று கருதி அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லையாம். இதைக் கேட்ட ஸ்டாலின், கனிமொழியை அப்படி ஒரு பாராட்டு பாராட்டினாராம்! அழகிரிக்குப் பதில் அந்த இடத்தில் கனிமொழியை அமர்த்தினால் தமக்கு சிக்கல் இருக்காது என்றே ஸ்டாலினும் கருதுகிறாராம்! ஆக நம்பர் 2 கனிமொழி?












Click it and Unblock the Notifications