கணவரை மிரட்ட திருடர்களை அனுப்பிய மனைவி.. போட்டுத் தள்ளிய கணவர்!
பிட்ஸ்பர்க்: தனது கணவரை வீட்டை விட்டு வெளியேற்றுவதற்காக, சில திருடர்களை அனுப்பி வைத்தார் மனைவி. ஆனால் கணவரோ, திருடனை போட்டுத் தள்ளி விட்டார். இப்போது அந்த மனைவியையும், அவரது கள்ளக்காதலரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவில்தான் இந்தக் கூத்து. அந்தக் கதையைப் படியுங்கள்...
பிட்ஸ்பர்க்கில் வசித்து வருபவர் சார்மைன் டய்ஜெரான். 28 வயதான இவருக்கு திருமணமாகி 8 வருடங்கள் ஆகிறது. ஆனால் கணவர் மீது அதிருப்தியுற்ற அவர், 22 வயதேயான மாட் பார்க்கர் என்பவரை பிடித்தார். இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால் கோபமடைந்த சார்மைனின் கணவர் தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டார்.
ஆனால் தானும், தனது மனைவியும் இணைந்து வாங்கிய வீட்டை விட்டு அவர் வெளியேறவில்லை. இதனால் கோபமடைந்தார் சார்மைன். தனது கணவரை வீட்டை விட்டு விரட்ட அவர் திட்டமிட்டார். இதற்காக ஒரு திருட்டுக் கும்பலை ஏற்பாடு செய்தார்.
அவர்களும் போலியான துப்பாக்கி மற்றும் நிஜக் கத்தியுடன் வீடு புகுந்தனர். அங்கிருந்து சார்மைனின் கணவரை உடனே வீட்டை விட்டு வெளியேறி விட வேண்டும் என்று கூறி மிரட்டினர். ஆனால் சற்றும் பயப்படாத சார்மைனின் கணவர், ராபர்ட் லின்ட்சே என்ற திருடன் வைத்திருந்த கத்தியைப் பறித்து அதே வேகத்தில் ராபர்ட்டின் கழுத்தில் ஒரே போடாக போட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த ராபர்ட் துடிதுடித்துச் செத்தார்.
இதைப் பார்த்த திருடர்கள் பயந்து போய் வீட்டை விட்டு ஓடி விட்டனர். அதன் பின்னர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார் சார்மைனின் கணவர். போலீஸார் விரைந்து வந்து ராபர்ட்டின் உடலை மீட்டனர். விசாரணையில் சார்மைன்தான் இவர்களை ஏவி விட்டது என்பது தெரிய வந்தது.
இதையடுத்து சார்மைன், அவரது கள்ளக்காதலர் பார்க்கர், பார்க்கரின் தம்பி சார்லஸ், ஜிம்மி என்பவர் ஆகியோரைக் கைது செய்தனர். தற்காப்புக்காக கொலை செய்ததால் சார்மைனின் கணவர் மீது வழக்குப் போட முடியாது என்று போலீஸார் கூறியுள்ளனர்.