டி.எஸ்.பி வெள்ளத்துரைக்கு எதிராக திருவாரூர் கோர்ட் வாரண்ட்!...
திருவாரூர்: மானாமதுரை டி.எஸ்.பி. வெள்ளத்துரை மற்றும் 4 பேர்களுக்கு எதிராக திருவாரூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ‘மாட்டு' ரவி என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: அதில், ‘‘வழக்கு ஒன்றில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்திருந்த நான், தினமும் திருவாரூர் நகர காவல் நிலையத்தில் கையெழுத்துப் போட்டு வந்தேன். அப்போது வெள்ளைத்துரை தலைமையில் வந்த போலீஸ் குழு ஒன்று, என்னைத் தூக்கிச் சென்று என்கவுன்டரில் கொல்ல முயன்றது.
இந்தத் தகவல் அறிந்த எனது வழக்கறிஞர் ஊடகங்களுக்கு தகவல் சொன்னதோடு, காவல் துறை உயர் அதிகாரிகளுக்கும் தந்தி மூலம் தகவல் அனுப்பினார். அதனை அடுத்து என்கவுன்டர் திட்டத்தைக் கைவிட்டனர். ஆனால், எனது காலை உடைத்ததோடு, கும்பகோணத்தில் ஒருவரிடம் 200 ரூபாய் பிக் பாக்கெட் அடிக்க முயன்றதாக என் மீது பொய் வழக்குப் போட்டனர்'' என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த மனுவை திருவாரூர் நீதிமன்றத்துக்கு விசாரணைக்கு அனுப்பி வைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.
இவ்வழக்கில் நேற்று ஆஜராகுமாறு வெள்ளத்துரை உள்ளிட்டவர்களுக்கு திருவாரூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சார்லஸ் நெப்போலியன் என்ற இன்ஸ்பெக்டர் மட்டும் ஆஜர் ஆனார். வெள்ளைத்துரை மற்றும் நான்கு போலீஸார் ஆஜராகவில்லை. அதனை அடுத்து இவர்கள் ஐந்து பேருக்கும் திருவாரூர் நீதிமன்றம் பிடி வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications