எல்லையில் பதற்றம்- பாஜக தலைவர்களுடன் சிவசங்கர் மேனன் சந்திப்பு

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தானுடனான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் ஜனவரி 6-ந் தேதி தொடர்ச்சியாக அத்துமீறல்களில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது. இந்திய ராணுவ வீரர்களைக் கோரமாக கொலை செய்து அவர்களின் தலையைத் துண்டித்தது பாகிஸ்தான் ராணுவம். அதில் ஹேமராஜ் என்ற ராணுவ வீரரின் துண்டித்த தலையை தூக்கிச் சென்றுள்ளது பாகிஸ்தான். மேலும் இந்திய நிலைகள் மீது தொடர்ச்சியாக அந்த நாடு தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருவதால் எல்லையில் போர் மேகம் சூழ்ந்திருக்கிறது.
இந்நிலையில் பிரதமர் மன்மோகன்சிங் இது தொடர்பாக எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் ,பாகிஸ்தானை கண்டிக்காமல் இருப்பதாக பாஜக கடும் கண்டனம் தெரிவித்திருதது. இந்தக் கண்டனத்துக்குப் பின்னர் பாஜக மூத்த தலைவர்கள் அருண் ஜேட்லி மற்றும் சுஷ்மா ஸ்வராஜை நேற்று தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மன்மோகன்சிங், எல்லை பதற்றம் குறித்து எதிர்க்கட்சிகளுடனும் கலந்து ஆலோசிக்கப்படும் என்று உறுதியளித்திருக்கிறார். இதேபோல் எதிர்க்கட்சிகளைக் கலந்து ஆலோசிக்காமல் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளமாட்டோம் என்றும் உறுதியளித்திருக்கிறார்.
இதைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன் இன்று பாஜக மூத்த தலைவர்களான அருண்ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரை சந்தித்துப் பேசினார். சுஷ்மா ஸ்வராஜின் இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது, பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்போம் என்று ராணுவ தலைமை தளபதி பிக்ரம்சிங் கூறியிருப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications