தெலுங்கானா தனி மாநிலம்- விரைவில் மத்திய அரசு அறிவிப்பு!
ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தின் தெலுங்கானா பகுதி காங்கிரஸ் கட்சியினர் கடுமையான நெருக்கடியை சமாளிக்க முடியாததால் மத்திய அரசு தெலுங்கானா தனி மாநிலம் பற்றிய அறிவிப்பை விரைவில் வெளியிடக் கூடும் என்று கூறப்படுகிறது. ஆனால் பிறபகுதி காங்கிரஸார் கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதால் ஆந்திரா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் தெலுங்கானா பகுதிகளை பிரித்து தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி உள்ளிட்ட பல கட்சிகளும் மாணவர்களும் போராட்டம் நடத்திப் பார்த்தும் மத்திய அரசிடமிருந்து 'உறுதிமொழி'யைத்தான் பெற முடிந்தது. இந்த உறுதி மொழி பெறப்பட்டும்கூட ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.
இந்நிலையில் தெலுங்கானா விவகாரத்தில் நழுவிக் கொண்டோம் என்று கனவு கொண்டிருந்த மத்திய அரசுக்கு தெலுங்கானா பகுதி காங்கிரஸ் கட்சியினராலேயே கடும் நெருக்கடி ஏற்பட்டது. தெலுங்கானா தனி மாநிலம் அமைக்காவிட்டால் எதிர்வரும் சட்டசபை தேர்தலிலும், லோக்சபா தேர்தலிலும் அப்பகுதியில் காங்கிரஸ் மண்ணைக் கவ்வ நேரிடும் என்று எச்சரித்தனர். மேலும் தாங்கள் கூண்டோடு ராஜினாமா செய்துவிட்டு வேறு கட்சிக்குப் போய்விடுவோம் என்றும் எச்சரித்தனர்.
இது தொடர்பாக டெல்லியில் முகாமிட்டு பல சுற்றுப் பேச்சுகள் நடத்தப்பட்டன. இதனால் வேறுவழியின்றி தனித் தெலுங்கானா மாநில அறிவிப்பை மத்திய அரசு வெளியிட இருக்கிறது. ஆந்திர மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தனம் நாகேந்தர் தனம் கூறுகையில், ஆந்திர மாநிலம் பிரிக்கப்படுவது பற்றி மத்திய அரசு தகவல் அனுப்பியிருக்கிறது. ஹைதராபாத் என்பது 10 ஆண்டுகளுக்கு பொதுதலைநகராக (ஆந்திரா மற்றும் தெலுங்கானாவுக்கு) இருக்கும் என்றார்.
இதே கருத்தை மற்றொரு அமைச்சரான ஸ்ரீதர் பாபு, தெலுங்கானா கனவு விரைவில் நிறைவேறப் போகிறது. மத்திய அரசு சிக்னல் கொடுத்துவிட்டது என்று கூறியுள்ளார்.
ஆனால் தனி மாநிலம் உருவாக்குவதற்கு கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். தெலுங்கானா உதயமானால் ராஜினாமா செய்ய எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் முடிவு செய்து உள்ளதாகக் கூறியுள்ளதால் ஆந்திராவில் பதற்றமான நிலைமை உருவாகி உள்ளது.












Click it and Unblock the Notifications