ரஜினியின் 'தனி வழி' எனக்கு தெரியாது; நரேந்திர மோடி பிரதமராகனும்: சோ
சென்னை: மத்தியில் திமுக அதிகாரத்துக்கு வரக் கூடாது, அதிமுக தான் வர வேண்டும். பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடியின் பெயரை அத்வானி முன்மொழிய வேண்டும் என்று துக்ளக் ஆசிரியர் சோ கூறினார்.
துக்ளக் பத்திரிகையின் 43வது ஆண்டு விழா சென்னையில் நடந்தது.

காங்கிரஸ் ஊழல்வாதிகள்.. பாஜகவில் 'நேர்மைவாதிகள்':
அதில் பேசிய சோ, காங்கிரஸ் ஊழல் கட்சியாகவும், பாஜக நேர்மையான கட்சியாகவும் திகழ்கின்றன. இந்த இரு கட்சிகளையும், ஒப்பிட்டு பார்த்தால் காங்கிரசில் ஊழல்வாதிகளும், பாஜகவில் நேர்மையானவர்களும் உள்ளனர்.

மோடி தான் பிரதராக வேண்டும்.. அத்வானி முன்மொழிய வேண்டும்:
பாஜகவில் அருண் ஜேட்லி, ஜஸ்வந்த் சிங், யஷ்வந்த் சின்கா போன்ற தலைவர்களுக்கு பிரதமராகும் எண்ணம் உள்ளது என்றாலும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு மட்டுமே பிரதமராகும் தகுதி உள்ளது. அவரது பெயரை அத்வானி முன்மொழிவார் என்று நம்புகிறேன்.
கட்சித் தலைமைக்கு மற்றவர்கள் கீழ்படிந்து நடந்தால் தான் அந்தக் கட்சி உருப்படும். நாம் சொன்னால், மோடி கேட்க மாட்டார் என்ற பயம் பாஜக தலைவர்களுக்கு உள்ளது.

திமுக வரப்டாது.. அதிமுக தான் வரோணும்:
மத்திய அரசில் திமுக அதிகாரத்திற்கு வரக் கூடாது, அதிமுக தான் அதிகாரத்திற்கு வர வேண்டும். மத்திய அமைச்சரவையில், திமுக இடம் பெற்றிருந்தும், காவிரி, முல்லை பெரியாறு, தமிழகத்தில் மின் தட்டுப்பாட்டை நீக்குவது போன்ற பிரச்சனைகளில் எந்த அக்கறையும் காட்டவில்லை.
தமிழகத்தின் நலன் சார்ந்த விஷயங்களுக்காக, மத்திய அரசிடம் தைரியமாக முதல்வர் ஜெயலலிதா போராடுகிறார். அவரது நிலைப்பாட்டை மற்ற மாநில முதல்வர்கள் வரவேற்கின்றனர். மத்திய அரசில் அதிமுக அதிகாரத்திற்கு வர வேண்டும். இதற்காக லோக்சபா தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக மக்கள் வாக்களிக்க வேண்டும்.

மின் வெட்டு சரியாகிவிடும் என்கிறார் சோ:
மத்திய அரசில் திமுக மீண்டும் இடம் பெற்றால், தமிழகத்துக்கு மின்சாரம் கிடைக்காது.
இந்த ஆண்டு இறுதிக்குள், மின் வெட்டு சீராகி விடும். அதற்கான பணிகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 47,000 ஆசிரியர்கள் நியமனம், அரசு ஊழியர்கள் நியமனம் மற்றும் போலீசார் தேர்வில் இந்த ஆட்சி மீது எந்தப் புகாரும் எழவில்லை.
அதிமுக அரசை எல்லாவற்றிலும் நான் ஆதரிக்கவில்லை. கூடங்குளம் அணு மின் நிலையம் பிரச்சனையில், ஆரம்பத்தில் அரசு கடுமையான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அண்ணா நூலகத்திற்கு இடையூறு செய்திருக்கக் கூடாது. அதிமுக ஆட்சியில் கட்ட பஞ்சாயத்து, நில அபகரிப்பு, ரவுடியிசம் போன்ற செயல்பாடுகள் ஒழிக்கப்பட்டுள்ளன.

வைகோவின் நடை பயணமும்.. சர்க்கரை வியாதியும்:
வைகோ நடைபயணம் மேற்கொள்வதால் அவருக்கு சர்க்கரை வியாதி குறையும் வாய்ப்பு உள்ளது. தேசிய நதி நீர் இணைப்பு இப்போது நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.
இலங்கைத் தமிழர் பிரச்சனையில் ராஜிவ் காந்தி- ஜெயவர்த்தனா ஒப்பந்தம் நிறைவேறியிருந்தால், இலங்கை தமிழர்களுக்கு வாழ்வுரிமை கிடைத்திருக்கும்.

ரஜினியின் 'தனி வழி' எது.. தெரியாதாம்:
தனி மனிதன் காட்டுகிற வழியில், மற்றவர்கள் செல்வது தான் அந்த தலைமைக்கு அழகு. என் வழி தனி வழி என ரஜினி சொல்வது நேர் வழியாகத்தான் இருக்கும். தான் செல்லும் வழி சரியானதாக இருக்கும் என அவர் நம்புகிறார். அது என்ன தனி வழி என்று எனக்குத் தெரியாது. இனிமேல் தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
கடந்த ஆண்டு நடந்த துக்ளக் 42வது விழாவில் அத்வானி், நரேந்திர மோடி, ரஜினி ஆகியோர் பங்கேற்றது நினைவுகூறத்தக்கது.












Click it and Unblock the Notifications