தமிழகத்தில் உற்சாகத்துடன் பொங்கல் விழா! இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம்!

தை மாதத்தின் முதல் நாளான நேற்று பொங்கல் திருநாளை முன்னிட்டு பெண்கள் அதிகாலையிலேயே வீட்டு வாசலில் காண்போரைக் கவரும் வகையில் பல வண்னக் கோலமிட்டு அலங்கரித்தனர். பின்னர் புத்தாடை அணிந்து சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.
காவிரி டெல்டா பிரதேசங்களில் சில இடங்களில் காவிரி நீரைப் பெற்றுத்தராத மத்திய அரசைக் கண்டிக்கும் வகையில் கறுப்புக் கொடி ஏற்றி பொங்கல் கொண்டாடப்பட்டது.
இன்று உழவர்களின் நண்பர்களாக போற்றப்படும் மாடுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் பொங்கல் வைத்து சிறப்பு செய்யப்படும். மாடுகளைக் குளிப்பாட்டி அதன் கொம்புகளுக்கு வர்ணம் பூசி பொங்கல் வைத்து போற்றும் நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றன.
சென்னை நகரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுமார் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். நாளை காணும் பொங்கல் என்பதால் பல லட்சக்கணக்கான மக்கள் சென்னையின் கடற்கரை பகுதிகளில் திரள்வர் என்பதால் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னை மெரினா கடற்கரையின் பெரும்பாலான இடங்களில் ஒலிபெருக்கிகள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்புகளை மாநகர போலீசார் தொடர்ந்தும் அறிவுறுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications