'நாளைய பாரதம் நமது கையில்'- ஜெ.வின் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் சபதம்

நீலகிரி அருகே கோத்தகிரியில் எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
ஏழை, எளிய மக்களின் இதயங்களில் என்றென்றும் நிறைந்து விளங்கும், மாசில்லா மாணிக்கம்; வருடங்கள் கரைந்தாலும் முழு நிலவாய் நிலைத்த புகழ்கொண்ட நிகரில்லா வள்ளல்; மதங்கள் உலவும் மனங்களில் மனிதாபிமானங்களை வளர்த்த மனிதநேயப் பண்பாளர்; எனது அரசியல் ஆசான், கழக நிறுவனத் தலைவர், இதயதெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் 96-வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு இன்று கோத்தகிரியில் நிறுவப்பட்டிருக்கும் அவரது திருவுருவச் சிலையை திறந்து வைத்ததில் எல்லையில்லா ஆனந்தமும் பெருமகிழ்ச்சியும் அடைகின்றேன்.
இன்று அதிமுக, ஆறாவது முறையாக தமிழ்நாட்டின் அரியணையில் அமர்ந்து, இந்தியாவில் தமிழகமே முதன்மை மாநிலம் என்னும் இலக்கை நோக்கி பீடு நடை போடுகிறது. தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்படும் புரட்சிகர திட்டங்கள், பிற மாநிலங்களால் பின்பற்றப்படுகின்றன என்றால், தூய்மையான சிந்தனை, உயர்ந்த லட்சியம், செம்மையான செயல்பாடு, உண்மையான உழைப்பு, சிறந்த நிருவாகம் என்னும் நமது இலக்கும்; அதை அடைய நாம் பின்பற்றுகிற இலக்கணமும்தான் காரணங்கள்.
அதிமுக அரசின் வெற்றி
தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளான காவிரி, முல்லைப் பெரியாறு விவகாரங்களில் நீதியின் துணை கொண்டு தமிழகத்தின் உரிமையை மீட்டெடுப்பதற்கு கண் துஞ்சாது எனது தலைமையிலான அரசு கடமையாற்றுகிறது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடும் முடிவை, மத்திய அரசு இந்த மாத இறுதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது, கழக அரசின் முனைப்புக்கும், முயற்சிக்கும் கிடைத்திருக்கும் வெற்றி.
தமிழ் நாட்டின் உரிமைகளை மீட்டெடுப்பது; மக்கள் நலத் திட்டங்களால் ஏழை-எளிய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது; கருணாநிதி சீரழித்த, தமிழகத்தின் நிதிநிலையை, பொதுத்துறை நிறுவனங்களை, பொறுப்போடு போராடி மீட்டெடுப்பது என தமிழக மக்களை வளமான பாதைக்கு இட்டுச் செல்லும் லட்சிய அரசாக உங்கள் அன்புச் சகோதரியின் கழக அரசு அயராது உழைத்து வருகிறது.
எம்ஜிஆரை விஞ்சி...
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.இருந்தவரை தி.மு.க.வை தோற்கடித்து எதிர்க்கட்சி ஆக்கினார். புரட்சித் தலைவரின் வழியைப் பின்பற்றி, அவரின் ஆசியோடு, நாம் 1991-லும் சரி, இப்போது 2011-லும் சரி, பிரதான எதிர்க்கட்சி என்னும் தகுதியை எட்டுவதற்கும் இயலாத நிலைக்கு தி.மு.க.-வைத் தள்ளி நாம் வீழ்த்தியிருக்கிறோம். புரட்சித் தலைவர் எதிர்கொண்டு சாய்த்தது கருணாநிதியை என்றால், இன்று நாம் வீழ்த்தியிருப்பதோ, கருணாநிதியின் பரந்து விரிந்த உலகமகா ஊழல் குடும்பத்தை, அதிகார வெறிபிடித்த கும்பலை என்பதுதானே உண்மை.
துரோகக் கும்பல்
மத்திய ஆட்சியில் பங்கேற்பு என்னும் அவர்களது ஆணவ ஆட்டத்தை, வரவிருக்கும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அடியோடு ஒழிப்போம்! தமிழகத்தின் உரிமைகளுக்கு குரல் கொடுக்காதது; கூடுதல் நிதி; அரிசி ஒதுக்கீடு; மண்ணெண்ணெய் ஒதுக்கீடு; மின்சார ஒதுக்கீடு; தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்திற்கு டிஜிட்டல் உரிமம் வழங்காதது; போன்ற தமிழகத்தின் நியாயமான கோரிக்கைகளுக்கு முட்டுக்கட்டைகளை போடுகிற தமிழினத் துரோக, தீயசக்தி கும்பலை வேரோடு சாய்ப்போம்!"நாளைய பாரதம் நமது கையில்" என்ற இலக்கினை அடைய சுழன்று பணி செய்வோம்! என்றார் அவர்.












Click it and Unblock the Notifications