எண்ணெய் நிறுவனங்களிடம் டீசல் விலை நிர்ணய உரிமை: எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்
டெல்லி: டீசல் விலையை நிர்ணயிக்கும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்திய கம்யூனிஸ்ட்:இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா கூறுகையில், டீசல் மீதான கட்டுப்பாட்டை விலக்கி, அதன் விலை நிர்ணயத்தை எண்ணெய் நிறுவனங்களே மேற்கொள்ள மத்திய அரசு அனுமதித்துள்ளது. இது பொதுமக்களை கடும் சிரமத்துக்குள்ளாக்கும். இதற்கு ஐ.மு. கூட்டணி அரசு விரைவில் உரிய விலையைப் பெறும் என்றார்.
மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், ஏற்கெனவே விலைவாசி உயர்வால் மக்கள் அவதியடைந்து வரும் நிலையில் டீசல் விலை உயர்வு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.
"டீசல் விலையை உயர்த்தினால், அது பிற பொருள்களின் விலைவாசி உயர்வுக்கு வழிவகுத்துவிடும். மத்திய அரசின் மக்கள் விரோதமான இந்த முடிவுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். டீசல் விலையை உயர்த்தாததால் ஏற்படும் இழப்பு குறித்து அரசு தெரிவிக்கும் தகவல்களில் பாதிதான் உண்மையாகும். உண்மையான இழப்பு எவ்வளவு என்பதை அரசு தெரிவிக்க வேண்டும்" என பாஜகவின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. டேரக் ஓ பிரையான் கூறுகையில், கேஸ் சிலிண்டர் எண்ணிக்கையை 18 முதல் 24ஆக உயர்த்த வேண்டும். இப்போது விலையை அதிகரித்துவிட்டு, பட்ஜெட்டுக்கு பின்னர் விலையை குறைக்கும் தந்திரத்தில் மத்திய அரசு ஈடுபடுகிறது என்றார்.












Click it and Unblock the Notifications