ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க 'கோஷம்' ஜாஸ்தியாகிறது!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் வெள்ளிக்கிழமை தொடங்கிய காங்கிரஸ் கட்சியின் சிந்தனைக் கூட்டத்தில் (சிந்தன் சிவிர்) காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி மற்றும் மூத்த தலைவர்கள், அக்கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள், நிர்வாகிகள், இளைஞர் காங்கிரஸார் என 347 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய எம்பிக்களான ராஜ் பப்பர், அவ்தார் சிங் பதானா உள்ளிட்ட பலரும் ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அதே போல மூத்த காங்கிரஸ் தலைவரும் மத்திய அமைச்சருமான சசி தரூர் கூறுகையில், காங்கிரஸ் ராகுல் காந்தியின் கட்டுப்பாட்டில் வந்தால் நாங்கள் பாதுகாப்பான இடத்தில் இருப்பதை உணர்வோம் என்றார்.
முதல் நாளில் லேசாக ஆரம்பித்த இந்த கோஷம் மேலும் வலுவடைந்தது. இன்று கூட்டத்தில் பேசிய தலைவர்களும், வெளியே பத்திரிக்கையாளர்களிடம் பேசிய தலைவர்களும் ராகுல் காந்தியை உடனடியாக பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டியது மிக மிக அவசியம் என்று வாதிட ஆரம்பித்துள்ளனர்.
நேற்று இந்தக் கூட்டத்தை துவக்கி வைத்துப் பேசிய சோனியா காந்தி, கோஷ்டி பூசல்களை மறந்து காங்கிரசார் ஒற்றுமையுடன் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும். கூட்டணி கட்சிகளுக்கு உரிய மதிப்பு அளிக்கும் அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் புத்தெழுச்சியில் சமரசம் செய்து கொள்ளக்கூடாது.
கூட்டணிக் கட்சிகளை நாம் மிகவும் மதிக்கிறோம். ஆனால், அதே சமயத்தில் நாம் நமது கட்சியையும் பலப்படுத்த வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் அளிக்க வேண்டும் என்பதில் சமரசம் கிடையாது.
உத்தரப் பிரதேசம், பிகார், குஜராத், மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் நாம் பல ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தை இழந்துவிட்டோம். தமிழகத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாகவும், மேற்கு வங்கத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாகவும் ஆட்சியை பிடிக்க முடியாமல் போய்விட்டது.
கட்சியை பலப்படுத்துவது குறித்து இங்கு சுதந்திரமாகவும் வெளிப்படையாகவும் கருத்துகளைத் தெரிவிக்கலாம். காங்கிரஸ் போன்ற பெரிய கட்சியிடமிருந்து மக்கள் அதிகம் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.
இன்றைய இளைய தலைமுறையினரை நாம் ஒதுக்கிவிட முடியாது. அவர்களின் குரலுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும். நாட்டில் ஊழல் மலிந்துவிட்டதாக மக்கள் நினைக்கின்றனர். இந்த நிலையை மாற்ற வேண்டும்.
பலாத்காரம், பெண் சிசுக் கொலை என கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான வன்செயல்கள் ஒட்டுமொத்த சமுதாயத்தின் நேர்மைக்கு ஏற்பட்ட கரும்புள்ளி. இது வெட்கக் கேடானது என்றார் சோனியா காந்தி.
இந் நிலையில் சோனியா குறிப்பிட்ட பெரும்பாலான பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வாக ராகுல் காந்தியே இருக்க முடியும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கருதுவதாகத் தெரிகிறது. இதையடுத்து அவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற குரல்கள் இன்று அதிகமாகிவிட்டன.
உத்தரப் பிரதேசம், பிகார், குஜராத் சட்டமன்றத் தேர்தல்களில் ராகுல் காந்தியால் ஏதும் செய்துவிட முடியவில்லை என்றாலும் கூட தேசிய அளவில் அனைவராலும் ஏற்கப்படத்தக்க, இளைய தலைவர் ராகுல் காந்தியே என்று காங்கிரஸ் தலைவர்கள் கருதுகின்றனர்.
இதற்கிடேயே காங்கிரஸ் எதிர்நோக்கியுள்ள பல்வேறு சவால்களை சந்திப்பது பற்றி ஆலோசிக்க தனித்தனியாக 5 குழுக்களை சோனியா காந்தி அமைத்துள்ளார். இந்தக் குழுக்கள் தனித்தனியாக அறிக்கைகளை தயாரித்து சோனியாவிடம் அளிக்கும். கட்சி எதிர்நோக்கியுள்ள அரசியல் சவால்கள் குறித்து ஆலோசிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.ஆண்டனி தலைமையில் அமைக்கப்பட்டு உள்ள குழுவின் விவாதத்தில் நிதியமைச்சர் ப.சிதம்பரமும் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இன்றுடன் இந்தக் கூட்டம் முடிவடைந்ததும் அதன் தொடர்ச்சியாக நாளை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடைபெறுகிறது. மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு இந்த கூட்டத்தில் இறுதி வடிவம் கொடுக்கப்படும்.
மேலும் 5 குழுக்களின் அறிக்கைகள் 1,500 பேர் கொண்ட அகில இந்திய காரிய கமிட்டி கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதும் விவாதம் நடைபெற உள்ளது. 347 பேர் கலந்து கொண்ட கூட்டத்திலேயே ராகுலை அடுத்த பிரதமர் வேட்பாளராக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக ஒலித்த நிலையில், 1,500 பேர் கொண்ட கூட்டத்தில் இந்தக் கோரிக்கை மேலும் அதிகமாகும் என்று தெரிகிறது.
உத்தரப் பிரதேசம், பிகார், குஜராத் சட்டமன்றத் தேர்தல்களில் ராகுல் காந்தியால் ஏதும் செய்துவிட முடியவில்லை என்றாலும் கூட தேசிய அளவில் அனைவராலும் ஏற்கப்படத்தக்க, இளைய தலைவர் ராகுல் காந்தியே என்று காங்கிரஸ் தலைவர்கள் கருதுகின்றனர்.
ஆனால், இந்த யோசனையை பல மூத்த தலைவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர்களும் இந்த கோஷத்தை ஒட்டியே பேச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அடுத்த தேர்தலில் பாஜக வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி முன் நிறுத்தப்படலாம் என்ற சூழ்நிலையில், அவருக்குப் போட்டியாக எந்த அனுபவமும் இல்லாத ராகுலை முன் நிறுத்துவது காங்கிரசுக்கு எதிராகவே அமையும் என்று மூத்த தலைவர்கள் சிலர் கருதுகின்றனர்.
இந் நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும் ராகுலின் தீவிர ஆதரவாளரும், அவரது முக்கிய ஆலோசகருமான திக்விஜய் சிங் கூறுகையில், இந்த விவகாரத்தில் ராகுல் காந்தியை யாரும் நிர்பந்திக்கக் கூடாது. தனது முடிவை எடுக்க வேண்டியது ராகுல் தான். எப்போதுமே காங்கிரஸ் தனது பிரதமர் வேட்பாளரை எப்போதுமே அறிவித்ததில்லை. இந்த முறையும் அப்படித்தான் இருக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications