ஜெயிலில் இருந்தவாரே படித்து 31 பட்டங்களைப் பெற்ற 'டாக்டர் கைதி'!
அகமதாபாத்: அன்னிய செலாவணி சட்டத்தில் கைதாகி சிறை சென்ற டாக்டர் ஒருவர், அங்கேயே படித்து 31 பட்டங்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.
குஜராத்தின் அகமதாபாத் நகரை சேர்ந்தவர் டாக்டர் பானு படேல். கடந்த 2004ல் அன்னிய செலாவணி கட்டுப்பாட்டு (பெரா) சட்டத்தில் இவர் கைது செய்யப்பட்டார். இவருக்கு அகமதாபாத் நீதிமன்றம் 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடந்த 2005ல் தீர்ப்பளித்தது.இதையடுத்து சபர்மதி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
டாக்டருக்கு படித்தவர் என்பதால் சிறையில் உள்ள மருந்தகத்தில் இவருக்கு வேலை தரப்பட்டது. அதன்படி கைதிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார். பின்னர் சிறையில் உள்ள நூலகத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.அப்போது, டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் படித்த கைதிகளுக்கு உதவுவதற்காக கடிதங்களை எழுதினார்.
இதை தொடர்ந்து ஆர்வத்தில் அஞ்சல் வழி பட்டப்படிப்பில் சேர்ந்தார். குறுகிய காலத்தில் படிப்பை முடித்தவர், உடனடியாக அடுத்த படிப்பில் சேர்ந்தார். இப்படியே, அடுத்தடுத்து, பி.காம், எம்.காம், எம்.எஸ்சி மற்றும் பல்வேறு முதுநிலை பட்டயப் படிப்புகளை முடித்தார்.
சிறையில் இருந்து 2011ம் டிசம்பரில் விடுதலை ஆனபோது மொத்தம் 31 பட்டம் மற்றும் பட்டய படிப்புகளை முடித்திருந்தார். சிறையில் இருந்தபடி அதிக பட்டங்களை பெற்றவர் என்பதால் சாதனை புத்தகங்களில் பானு படேலின் பெயர் இடம் பெற்றுள்ளது.விடுதலைக்கு பிறகு அவர் திறந்தவெளி பல்கலைக்கழக ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
இப்போது, குஜராத்தில் உள்ள சிறைகளில் இயங்கும் 26 பல்கலைக்கழக மையங்களின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதும் அவரை ஆசிரியராக நியமிக்க திறந்தவெளி பல்கலைக்கழகம் உறுதி அளித்துள்ளது.
ஜெயிலில் இருந்து 31 பட்டங்களைப் பெற்ற அவருடைய சாதனை 2013ம் ஆண்டின் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications