காங்கிரசின் 'சிந்தனை அமர்வு' கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட அந்த 4 முக்கிய அம்சங்கள்!
ஜெய்ப்பூர்: லோக்சபா தேர்தலுக்கு புதிய கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பது, நடுத்தர மக்களைக் கவருவது என்பது உள்ளிட்ட 4 அம்சங்களை மையமாக வைத்து ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வில் விவாதிக்கப்பட்டிருக்கிறது.
கூட்டணிக் கட்சிகள்
காங்கிரசின் சிந்தனை அமர்வில் முதன்மையாக விவாதிக்கப்பட்டது "கூட்டணி கட்சிகள்" பற்றியது. உத்தரப்பிரதேசம், பீகார், தமிழகம் போன்ற மாநிலங்களில் கூட்டணிக் கட்சிகளை சார்ந்துதான் காங்கிரஸ் இருக்கிறது. இருப்பினும் சொந்த பலத்தை அறிய வேண்டிய தேவை இருக்கிறது காங்கிரஸ் கட்சிக்கு என்ற கருத்தை முன் வைத்தார் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கமல்நாத்.
இரண்டு விதமாக கூட்டணியை உருவாக்கலாம் என்று காங்கிரஸ் கருதுகிறது. லோக்சபா தேர்தலுக்கு முன்பு ஒரு கூட்டணி, லோக்சபா தேர்தலுக்கு பின்பு ஒரு கூட்டணி என வியூகம் வகுக்கலாம் என யோசிக்கப்பட்டது. அதாவது லோக்சபா தெர்தலின் போது கூட்டணி அமைத்தாலும் ஆட்சி அமைக்கத் தேவையான இடம் தேவை எனில் புதிய கட்சிகளை இணைப்பது என்பதுதான் இதன் நோக்கம்.
நடுத்தர வர்க்கம்
இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் அஜய் மக்கான், நடுத்தர மக்களின் மனங்களை வெல்ல வேண்டிய தேவை காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது. கடந்த லோக்சபா தேர்தலில் 168 இடங்களில் 92 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியது. இந்த நிலைமையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமெனில் நடுத்தர மக்களைக் கவரும் வகையில் செயல்திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என்றார்.
சமூக ஊடகங்கள்
கட்சியில் உள்ள இளைஞர்கள் மட்டுமின்றி... அனைவருமே நவீன தொழில்நுட்ப வசதிகளையும் சமூக வலைதளங்களையும் பயன்படுத்த வேண்டியது அவசியம் என்ற கருத்தை அமைச்சர் கபில்சிபல் வலியுறுத்தினார். கட்சியின் அறிக்கைகள் அனைத்தையும் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வெளியிடுவதுடன் ஆரோக்கியமான விவாதங்களில் கட்சியினர் பங்கேற்க வேண்டியது அவசியமானது என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.
சிறுபான்மை, பெண்கள்
நாட்டில் பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்கான பாதுகாப்பு பற்றி கபில்சிபலும் ஷீலா தீட்சித்தும் எழுப்பினர். சிறுபான்மையினர் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரை கட்சி வேட்பாளர்களாக நிறுத்தக் கூடாது என்றும் அவர்கள் கூறினர். இதற்கான அறிவிப்பை கட்சி பகிரங்கமாக வெளியிட்டால் அத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு கடும் எச்சரிக்கையாக இருக்கும் என்றும் கூறப்பட்டது.
இந்த அம்சங்கள் தொடர்பாக காங்கிரஸ் காரியக் கமிட்டியில் விவாதிக்கப்பட்டு பின்னர் "ஜெய்ப்பூர் பிரகடனமாக" வெளியிடப்பட இருக்கிறது.












Click it and Unblock the Notifications