மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கீடு: ஜெயலலிதா உத்தரவு!
சென்னை: மாற்றுத் திறனாளிகளின் நலன்களுக்கான நிதி உதவி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தாவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
தொழு நோயாளிகள் நலன்
மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 10 அரசு மறுவாழ்வு இல்லங்கள் இயங்கி வருகின்றன. இதில் வசிக்கும் தொழு நோயாளிகளுக்கு எந்த விதமான பராமரிப்பு தொகையும் வழங்கப்படுவதில்லை. இதனை அறிந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொழு நோயாளிகளின் நலன் கருதி, பராமரிப்புத் உதவித் தொகையாக மாதம் ஒன்றுக்கு ஒவ்வொருவருக்கும் 1,000 ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் நடத்தப்படும் 10 அரசு மறுவாழ்வு இல்லங்களில் வாழ்பவர்கள், தங்களுக்கான காலணிகளை தாங்களே தயாரித்து வந்தனர். ஆனால் அந்த இல்லங்களில் தற்பொழுது, வேலை செய்ய இயலாத வயது முதிர்ந்த மற்றும் தொழுநோயினால் கை, கால் இழந்தவர்களின் எண்ணிக்கை அதிக எண்ணிக்கையில் உள்ளதால், அவர்களால் தங்களுக்கான காலணிகளை தாங்களே தயாரித்துக் கொள்ள இயலவில்லை. எனவே, இந்த இல்லங்களில் தங்கியுள்ள 1,301 இல்லவாசிகள், ஒவ்வொருவருக்கும், 300 ரூபாய் மதிப்புள்ள ஒரு இணை காலணியை வெளிச்சந்தையிலிருந்து கொள்முதல் செய்து வழங்கப்படும்.
மாற்றுத் திறனாளி மாணவர்கள்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கிழ் இயங்கி வரும் விடுதிகளில் பயிலும் மாணவ- மாணவியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவு செலவினத்தைபோல், மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கீழ் இயங்கும் 23 அரசு சிறப்புப் பள்ளிகளில் பயிலும் 1,731 மாணவ, மாணவியர்கள் மற்றும் 54 அரசு அங்கீகாரம் பெற்ற சிறப்புப் பள்ளிகளில் பயிலும் 6,483 மாணவ, மாணவியர் என 8,214 மாணவ, மாணவியருக்கு தற்பொழுது நபர் ஒருவருக்கு மாதம் ஒன்றுக்கு வழங்கப்பட்டு வரும் உணவு செலவினத்தை 450 ரூபாயிலிருந்து 650 ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கு...
மேலும், மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் ஆரம்பநிலை பயிற்சி மையங்கள், மாநில வள பயிற்சி மையம், சிறப்புப் பள்ளிகள், பகல் நேர காப்பகம் ஆகியவற்றில் பணிபுரியும். 302 சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் 205 மனவளர்ச்சிக் குன்றியோருக்கான சிறப்புப் பள்ளிகளில் பணியாற்றும் 600 சிறப்பு ஆசிரியர்களுக்கு அரசால் ஊதிய மானியமாக மாதந்தோறும் வழங்கப்பட்டு வந்த 5,000 ரூபாயை 10,000 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளர். மாற்றுத் திறனாளிகள் நலத்துறையில் கீழ் இயங்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் பணிபுரியும் சிறப்பு ஆசிரியர்களுக்கு அரசால் ஊதிய மானியம் வழங்கும் திட்டத்தை மேலும் 30 காது கேளாதோர் சிறப்பு பள்ளிகளுக்கும், 9 பார்வையற்றோர் சிறப்பு பள்ளிகளுக்கும் நீட்டிப்பு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு பள்ளிக்கு 3 ஆசிரியர் வீதம் 117 ஆசிரியர்களுக்கு அரசு ஊதிய மானியமாக ஒவ்வொரு ஆசிரியருக்கும் மாதந்தோறும் 10,000 ரூபாய் வழங்கப்படும்.இதன் மூலம் மொத்தத்தில் 1,019 சிறப்பாசிரியர்கள் பயன் பெறுவார்கள்.
கை கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள், பணிபுரியும், சுயதொழில்புரியும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் நவீன செயற்கை அவயங்கள் வழங்கும் திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடான 35 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் போதுமானதாக இல்லை என்பதால் மேலும் 70 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று மாற்றுத் திறனாளிகளின் நன்மையைக் கருதி, அவர்கள் பயன்படுத்தும் பேட்டரியால் இயங்கும் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட மூன்று சக்கர மோட்டார் வண்டிகளுக்கு இதுவரை வசூலிக்கப்பட்டு வந்த மதிப்பு கூட்டு வரியான 14.5 விழுக்காட்டினை வசூலிப்பதில் இருந்து முழு விலக்களித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் .












Click it and Unblock the Notifications