மதுரையில் வளைத்து வளைத்து வழிப்பறிக் கொள்ளையர்கள் வேட்டை... 104 பேர் கைது
மதுரை: மதுரையில் வழிப்பறிக் கொள்ளையர்களைக் குறி வைத்து போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த நவம்பர் மாதம் முதல் ஜனவரி 15ம் தேதி வரையிலான காலகட்டத்தி்ல, 104 வழிப்பறியாளர்களை வளைத்துப் பிடித்துள்ளது மதுரை போலீஸ்.
இந்தக் களவாணிகளிடமிருந்து ரூ. 2.81கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
கடந்த 2010 ஆம் ஆண்டில் மதுரையில் நடந்த 644 குற்ற வழக்குகளில், 77 வழிப்பறி வழக்குகளாகும். 2011-ல் 650 வழக்குகளில் 86 வழிப்பறிச் சம்பவங்களும், 2012-ல் 568 குற்ற வழக்குகளில் 71 வழிப்பறிச் சம்பவங்களும் நடந்துள்ளன.
திருட்டு வழக்குகளில் கடந்த 2010-ல் 68 சதவிகிதமும், 2011-ல் 63 சதவிகிதமும், 2012-ல் 69 சதவிகித பொருள்கள் மற்றும் நகைகள் மீட்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு நவம்பரில், மாநகர் குற்றப் பிரிவுக்கு துணை ஆணையராக பெரோஸ்கான் அப்துல்லா பொறுப்பேற்ற பிறகு, குற்ற வழக்குகளில் கவனம் செலுத்தப்பட்டு குற்றவாளிகளைப் பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டதாகக் கூறும் போலீஸார், அதனடிப்படையில் ஒரே மாதத்தில் 50-க்கும் மேற்பட்ட வழக்குகளில் துப்புத்துலக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர்.
கடந்தாண்டு நவம்பர் முதல் ஜனவரி 15 ஆம் தேதி வரையில், 94 குற்ற வழக்குகளில் துப்புத்துலங்கியுள்ளது. அதன் பேரில் 104 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களிடம் நடத்திய விசாரணை அடிப்படையில், 2 கிலோ 440 கிராம் எடையுடைய தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ. 58.94 லட்சம் என போலீஸார் தெரிவித்தனர்.
வழிப்பறிக் கொள்ளையர்களுக்கு எதிரான இந்த போலீஸ் வேட்டை மக்களை குஷிப்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications