லோக்சபா தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி..வியூகம் வகுக்கும் ராகுல்!
ராகுலும் திமுகவும்
காங்கிரஸ் கட்சியுடன் எத்தனையோ இக்கட்டான நிலைமைகளுக்கு மத்தியிலும் திமுக கூட்டணியை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்த போதுகூட ராகுல் காந்தி தமிழகத்துக்கு வந்து போயிருக்கிறார். ஆனால் ராகுல்காந்தி ஒருபோதும் திமுக தலைவர் கருணாநிதியை மரியாதை நிமித்தமாக சந்தித்ததே கிடையாது. ராகுல்காந்தியைப் பொறுத்தவரையில் திமுகவை வேண்டா வெறுப்பாக பார்க்கிறவர் என்ற மனநிலைதான் பொதுவான படிமமாக இருக்கிறது. இந்தியாவின் மூத்த அரசியல் தலைவராக கருணாநிதி இருந்தபோதும் அவருக்கான மரியாதையை கொடுக்காதவர் ராகுல்காந்தி என்பதுதான் திமுக தொண்டர்களின் மனநிலை. இருப்பினும்கூட ராகுல்காந்தி துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட உடனேயே வாழ்த்து தெரிவித்து வெள்ளோட்டம் பார்த்திருக்கிறார் கருணாநிதி. காங்கிரஸின் தீர்மானிக்கக் கூடிய சக்தியாக ராகுல் உருவெடுக்கும் நிலையில் திமுகவுடனான கூட்டணி என்பது சிலபல கேள்விகளை உள்ளடக்கியதாகவே இருக்கும் எனத் தெரிகிறது
தேமுதிகவும் ராகுலும்
அதேநேரத்தில் ராகுல் காந்தியைப் பொறுத்தவரையில் தேமுதிகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டுப் பார்த்தால் என்ன என்ற கேள்வியும் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது வேறுவழியின்றி திமுக- காங்கிரஸ் கூட்டணி நீடிக்கும் நிலையில் இதில் தேமுதிகவை இணைப்பது அல்லது தேமுதிக- காங்கிரஸ் கூட்டணி அமைப்பது போட்டியிடுவது என்பதுபற்றி ராகுல் காந்தி தீவிரமாக ஆராய்வதாகவும் தெரிகிறது. அண்மையில் டெல்லியில் தமிழக இளைஞர் காங்கிரசாரை சந்தித்த ராகுல்காந்தி தேமுதிக பற்றிய பல தகவல்களைக் கேட்டிருக்கிறார். இளைஞர் காங்கிரசாரும் தேமுதிக - காங்கிரஸ் கூட்டணி அமைந்தால் சிறப்பாக இருக்கும் என்றே போட்டு வைத்திருக்கின்றனர். இந்த தகவலும் விஜயகாந்த் காதுக்கு எட்டியிருக்கிறது. இதனால்தான் காங்கிரஸ் கூட்டணியை விமர்சிப்பதில் மென்மைப் போக்கை கடைபிடிக்கிறார் கேப்டன் என்று கிசுகிசுக்கின்றனர்.
ராகுலின் வியூகம் எப்படியாக இருந்தாலும் தொண்டர்கள் மனோநிலை என்னவோ?