ராமதாஸ், காடுவெட்டி குரு கடலூர் மாவட்டத்துக்குள் நுழைய கலெக்டர் தடை

காடுவெட்டி குருவுக்கும் இதேபோல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மதுரைக்குள் வரக் கூடாது என்று ராமதாஸுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடலூருக்குள்ளும் வரக்கூடாதுஎன அவருக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை வடலூரில் அனைத்து சமுதாய கூட்டம் நடத்துவதற்காக போலீசாரிடம் பாமக சார்பில் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் போலீசார் அனுமதி மறுத்து விட்டனர்.இந்த நிலையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ஜெயங்கொண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் குரு ஆகியோர் கடலூர் மாவட்டத்துக்குள் நுழைய தடை விதித்து கலெக்டர் கிர்லோஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக கலெக்டர் கிர்லோஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டத்தில் தற்போதுள்ள பதட்டமான சூழ்நிலையினை கருத்திற்கொண்டும், சட்டம், ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட்டு பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் பொருட்டு, கடலூர் மாவட்டத்தில் நுழைவதற்கும், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றை நடத்துவதற்கும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் ஜெயங்கொண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் குரு ஆகியோருக்கு குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144-ன் கீழ் தடை உத்தரவு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரையின் பேரில் 21-1-2013 முதல் வருகிற 20-3-2013 முடிய உள்ள காலத்திற்கு ஆணையிடப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications