நாளையும் 'ராஜினமா' படலத்தை அரங்கேற்றப் போகும் எதியூரப்பா ஆதரவு எம்.எல்.ஏக்கள்!
பெங்களூர்: அப்ப..இப்ப.. என்று சொல்லப்பட்டு வந்த கர்நாடகா ஆளும் பாரதிய ஜனதா அரசு கவிழும் நிலையில் இருக்கிறது. எதியூரப்பா ஆதரவு எம்.எல்.ஏக்கள் 23 பேரும் நாளை மொத்தமாக சபாநாயகரிடம் ராஜினாமா கடிதத்தை கொடுக்க உள்ளனர். அப்படி ராஜினாமா கடிதம் கொடுத்தால் ஆளும் ஷெட்டர் அரசு கவிழும் நிலை உருவாகும்.
கர்நாடகா முன்னாள் முதல்வர் எதியூரப்பா, கர்நாடகா ஜனதா கட்சி என்ற தனிக் கட்சியைத் தொடங்கியிருக்கிறார். அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்தும் பாஜகவில் நீடித்து வந்தனர். இந்த நிலையில் கர்நாடகா சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. ஆனால் எங்கள் ஆதரவுடனேயே ஆட்சி நடைபெறுகிறது... முதல்வர் ஷெட்டரை பட்ஜெட் தாக்கல் செய்யவிடாமல் கவிழ்ப்போம் என்று எதியூரப்பா கூறியிருந்தார்.
இந்நிலையில் எதியூரப்பா எம்.எல்.ஏ.க்கள் 14 பேர் சில நாட்களுக்கு முன்பு ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். ஆனால் சபாநாயகர் போபையா பெங்களூருவில் இல்லாததால் ஆளுநரிடம் அவர்கள் ராஜினாமா கடிதம் கொடுத்தனர். கர்நாடகாவில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில் சபாநாயகர் திடீரென காணாமல் போன மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த பரபரப்பை நேற்று தலைகாட்டி போபையா அடங்க வைத்தார்.
ஆட்சி கவிழும் அபாயம்
இதனால் கர்நாடகா அரசியல் களம் மீண்டும் அனல் கக்க தொடங்கியுள்ளது. நாளை 14 எம்.எல்.ஏக்களுடன் மேலும் 9 பேர் ராஜினாமா கடிதம் அளிக்க இருக்கின்றனர். 23 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தால் சட்டசபையில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மை பலத்தை இழந்துவிடும். சட்டசபையில் பாரதிய ஜனதாவுக்கு 118 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 23 பேர் ராஜினாமா செய்துவிட்டால் அந்த கட்சியின் எண்ணிக்கை 95 ஆக குறைந்துவிடும். ஆனால் காங்கிரஸ் உட்பட இதர கட்சி உறுப்பினர்கள் 103 பேர் இருப்பதால் பாஜக ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது.
எதியூரப்பா மகன் மீது நடவடிக்கை
இதேபோல் எதியூரப்பாவின் மகனும் எம்.பி.யுமான பி.ஒய். ராகவேந்திரா மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில பாஜக தலைவர் கே. ஈஸ்வரப்பா வலியுறுத்தியிருக்கிறார். இதனால் ராகவேந்திரா மீது இன்று நடவடிக்கை எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.
மேலிடம் உத்தரவு
இதற்கிடையே எதியூரப்பா ஆதரவாளர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் யாரும் ஈடுபட வேண்டாம் என்றும், எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா கடிதம் கொடுத்தால் அவற்றை ஏற்றுக்கொள்ளும்படியும் பாரதிய ஜனதா மாநில தலைவர்களுக்கு அக்கட்சி மேலிடம் உத்தரவிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications