வங்கதேசத்தில் ஆயத்த ஆடை தொழிற்சாலையில் தீ: 7 பெண்கள் உடல் கருகி பலி
டாக்கா: வங்க தேசத்தில் உள்ள ஆயத்த ஆடைகள் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பெண்கள் உடல் கருகி பலியாகினர்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வங்கதேச தலைநகர் டாக்கா அருகே உள்ள ஆயத்த ஆடை தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 112 பேர் பலியாகினர். இந்நிலையில் டாக்காவில் உள்ள ஆயத்த ஆடை தொழிற்சாலையில் நேற்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. டாக்காவின் புறநகர் பகுதியான முஹம்மத்பூரில் ஸ்மார்ட் பேக்டரி என்ற பெயரில் பேண்ட் மற்றும் சட்டைகள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. அந்த இரண்டு அடுக்குமாடி தொழிற்சாலையில் நேற்று திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டாவது மாடியில் வேலை செய்து கொண்டிருந்த 7 பெண் ஊழியர்கள் உடல் கருகி பலியாகினர். மேலும் 5 பேர் காயமடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து போராடி தீயை அணைத்தனர். இரண்டாவது மாடியில் கருகிய நிலையில் கிடந்த 7 பெண்களின் உடல்களை மீட்டனர். இந்த விபத்தில் தொழிற்சாலையில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமாகின. விபத்துக்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை.
வங்கதேசத்தில் 4,000க்கும் மேற்பட்ட ஆயத்த ஆடை தொழிற்சாலைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications