மதுரை: குறுக்கே வந்த வேன்.. தட்டிக்கேட்ட பஸ் டிரைவர், கண்டக்டருக்கு அடி
மதுரை: மதுரையில் சாலையில் போய்க் கொண்டிருந்த அரசு பஸ்சின் குறுக்கே திடீரென ஒரு வேன் கிராஸ் செய்ததால் அதை டிரைவரும், கண்டக்டரும் தட்டிக் கேட்டனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் சரமாரியாக வேனில் வந்தவர்கள் அடித்து உதைத்ததால் பரபரப்பானது.
திருவாதவூரில் இருந்து பெரியார் பஸ்நிலையத்திற்கு திங்கள்கிழமை இரவு ஒரு டவுன் பஸ் போய்க் கொண்டிருந்தது. அப்போது உத்தங்குடி பகுதியில் பஸ் வந்தபோது, பஸ்சின் முன்பு திடீரென ஒரு வேன் குறுக்கே சென்றதாக கூறப்படுகிறது. இதனால் வேன் மீது மோதாமல் இருக்க பஸ்சை டிரவைர் ஓரம் கட்டி நிறுத்தினார்.
அதன் பின்னர் டிரைவர் முரளிதரன், கண்டக்டர் சிராஜ், பின்னால் வந்த மற்றொரு அரசு பஸ் டிரைவர் பாண்டிகுமார் ஆகியோர் வேன் டிரைவரிடம் இப்படியா போவது என்று கேட்டுள்ளனர். ஆனால் அதைக் கேட்டு கோபமடைந்த வேன் டிரைவரும், வேனில் இருந்த சிலரும் சேர்ந்து தாக்குதலில் குதித்தனர்.
இதில் முரளிதரன், சிராஜ், பாண்டிகுமார் மூவரும் காயமடைந்தனர். இந்த திடீர் தாக்குதலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
தாக்குதல் நடத்தியவர்கள் தப்பி விட்டனர். அனைவரும் ஒத்தகடைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது. அவர்களைப் பிடிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.