திருவாரூர் அருகே மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜான தாயை குத்திக் கொன்ற மகன்
திருவாரூர்: திருவாரூர் அருகே பெற்ற தாயை மகனே குத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் அருகே உள்ள பூதமங்கலத்தைச் சேர்ந்தவர் பீவி பாத்திமா(67). உடல் நலக்குறைவு காரணமாக அவர் தஞ்சையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சை முடிந்து நேற்று வீடு திரும்பினார்.
அவரது மகன் முகமது சித்திக்(40). அவரது மனைவி சண்டை போட்டுவிட்டு தனது தந்தையின் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் சித்திக் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய தாயிடம், உனக்கு மருத்துவ செலவுக்காக ரூ.40,000 செலவு செய்துள்ளோம், அதை திருப்பிக் கொடு என்று கேட்டுள்ளார். இதையடுத்து தாய், மகனிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சித்திக் கத்தியை எடுத்து தனது தாயை குத்திக் கொன்றார்.
பின்னர் அவரின் உடலை வீட்டுக்கு பின்புறம் உள்ள வயலில் போட்டுவிட்டு தப்பியோடிவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பீவி பாத்திமாவின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். மேலும் தலைமறைவாக உள்ள சித்திக்கை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications