பிற மாநிலங்களில் விஸ்வரூபம் ஓடுகையில் தமிழகத்தில் மட்டும் ஏன் கூடாது? சிவசேனா
சென்னை: விஸ்வரூபம் பிரச்சனையில் கமலுக்கு ஆதரவாக இருக்கப் போவதாக சிவசேனா கட்சியின் தமிழக தலைவர் குமார ராஜா தெரிவித்துள்ளார்.
விஸ்வரூபம் படத்திற்கு தமிழக முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். இந்நிலையில் படத்தை வெளியிட தமிழக அரசு 2 வாரத் தடை விதித்துள்ளது. ஆனால் விஸ்வரூபம் கேரளா, ஆந்திரா ஆகிய அண்டை மாநிலங்களில் ரிலீஸாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் விஸ்வரூபத்திற்கு சில அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அந்த வரிசையில் தற்போது சிவசேனா சேர்ந்துள்ளது.
இது குறித்து சிவசேனா கட்சியின் தமிழக தலைவர் குமார ராஜா கூறுகையில்,
தீவிரவாதம் குறித்து தத்ரூபமாக காட்ட வேண்டும் என்று தான் விஸ்வரூபத்தில் முயற்சித்துள்ளனர். விஸ்வரூபம் பிற மாநிலங்களில் ஓடியும் அங்கு சட்ட, ஒழுங்கு பிரச்சனையோ, சமூக ஒற்றுமை சீர்குலைவோ ஏற்படவில்லை. அப்படி இருக்கையில் தமிழகத்தில் மட்டும் ஏன் படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என்கிறது மாநில அரசு?. விஸ்வரூபம் படத்தை ரிலீஸ் செய்ய போராடும் கமலுக்கு ஆதரவாக நாங்கள் இருப்போம் என்றார்.