மேல்மலையனூரில் எட்டிப் பார்த்த பேய்!… குடிசைகள் எரிந்த மர்மம்!!
விழுப்புரம்: கொஞ்சம் காலமாக பேய், ஆவி பற்றி சம்பவங்களும், செய்திகளும் ஊடகங்களில் அடிபடாமல் இருந்தது. இப்போது விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் குடிசைகள் சில பற்றி எரியவே மீண்டும் பற்றிக்கொண்டது பேய் பற்றிய கட்டுக்கதை செய்திகள்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பேய் வந்து பார்த்ததாக அப்பகுதி மக்கள் பீதியில் உறைந்து உள்ளனர். கடந்த மாதம் பேய் வந்தபோது 5 வீடுகள் எரிந்ததாகவும், இப்போது மறுபடியும் பேய் ஊருக்குள் எட்டிப்பார்த்த காரணத்தால்தான் மேலும் 5 குடிசை வீடுகள் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தன என்றும் பீதியோடு விவரிக்கின்றனர் ஊர்மக்கள்.
வீடுகளை பேய் பார்த்ததால் குடிசைகள் எரிந்ததாக கூறும் கிராம மக்கள், அதற்காக சிறப்பு பரிகார பூசை செய்யவும் தயாராகி வருகின்றனர். அச்சத்தோடு அவர்கள் விவரிக்கும் கதையைக் கொஞ்சம் படியுங்களேன்.

திடீரென தீப்பிடித்த குடிசை
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் குள்ளம்மாள். இவரது குடிசை வீடு, ஞாயிறு மதியம் 12 மணியளவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறி தப்பினர். அப்பகுதி மக்கள் குடிசை வீட்டில் பற்றிய தீயை அணைக்க முயன்றனர்.

மர்ம தீ விபத்து
அப்போது திடீரென அதே பகுதியைச் சேர்ந்த சந்திரன், சுசிலா, தனபாக்கியம், புருஷோத்தமன் ஆகியோரது வீடுகள் அடுத்தடுத்து மர்மமான முறையில் தீப்பிடித்தன. மேல்மலையனூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் முன்பு குடிசைகளின் கூரை முழுவதும் எரிந்து சேதமானது.

குடுகுடுப்பைக் காரர் சொல்லிட்டாரே!
இந்த தீவிபத்து பற்றி கூறிய குள்ளம்மாள், என்பவர் குடுகுடுப்பைக்காரர் ஒருவர் வந்து இந்தப் பகுதியில் 10 வீடுகள் தீப்பற்றி எரியும் என கூறினார். பேய் பார்த்ததால் தான் இது நடந்துள்ளது எனவும் குடுகுடுப்பைக்காரர் தெரிவித்தாகவும் பீதியோடு கூறினார். அவர் சொன்னது போல கடந்த மாதம் 5 வீடுகள் எரிந்தது. தற்போது 5 வீடுகள் அடுத்தடுத்து மர்மமான முறையில் தீப்பிடித்துள்ளது என்று கூறியுள்ளார் அந்த பெண்.

பரிகார பூஜை
அம்பேத்கார்நகர் பகுதியைச் சேர்ந்த மக்கள் அனைவரும், இது பேயின் லீலைதான் என்கின்றனர். வீடுகள் திடீர் திடீர் என்று எரிவதால் பேய் பீதியை போக்கவும், சாந்தப்படுத்தவும் கோயிலில் பரிகார பூஜை நடத்த முடிவு செய்து உள்ளனர்.

குடுகுடுப்பைக்காரரை கூப்பிடுங்கப்பா
பிரேசிலில் நேற்று விடுதி ஒன்று தீப்பிடித்து 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த செய்தியினால் ஒரே பரபரப்பாக உள்ளது ஒருவேளை மேல்மலையனூர் பேய்தான் பிரேசில் பக்கமும் சென்றதோ தெரியவில்லை. குடுகுடுப்பைக்காரரை கொஞ்சம் கூப்பிட்டு விசாரிங்கப்பா!












Click it and Unblock the Notifications