திருப்பதி வருகிறார் ராஜபக்சே: ராமதாஸ் கடும் எதிர்ப்பு!
கொழும்பு: இலங்கை அதிபர் ராஜபக்சே வரும் 8ம்தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏழுமலையானை தரிசிப்பதால் மனதில் நிம்மதி கிடைக்கிறது என்று ஏற்கனவே திருப்பதி வந்து தரிசனம் செய்தபோது ராஜபக்சே கூறியுள்ளார். தற்போது 3-வது முறையாக ராஜபக்சே வருகிற 8-ந்தேதி திருப்பதி வருகிறார்.
அதிபர் ராஜபக்சே கொழும்பில் இருந்து தனி விமானம் மூலம் பீகார் வருகிறார். அங்கு புத்த கயாவில் வழிபாடு நடத்தி விட்டு அதே விமானத்தில் ஆந்திர மாநிலம் ரேணி குண்டா செல்கிறார் அங்கிருந்து கார் மூலம் திருமலை செல்கிறார். அங்கு ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டு மீண்டும் கொழும்பு திரும்புகிறார்.
ராஜபக்சே வருகையையொட்டி இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று திருமலை வந்து தேவஸ்தான அதிகாரி ஸ்ரீனிவாசராவ், போலீஸ் சூப்பிரண்டு சுப்புராமரெட்டி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர்கள் ராஜபக்சே தரிசன நேரம், மற்றும் பாதுகாப்புகள் குறித்து பேசியதாக கூறப்படுகிறது.
பாதுகாப்பு கேமராக்கள்
திருப்பதி ஏழுமலையான் கோவில் பாதுகாப்புக்கு 200-க்கும் மேற்பட்ட கேமிராக்கள் பொருத்தப்படுவது போல திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலிலும் நவீன கேமிராக்கள் பொருத்தப்படுகிறது. இது குறித்து மத்திய உளவுத்துறை அதிகாரிகள் கோவில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். பழைய கேமிராக்களை ஆய்வு சென்ற அவர்கள் அதற்கு பதிலாக நவீன தொழில்நுட்ப கேமிரா பொருத்த அறிவுரை வழங்கினார்கள்.
டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை
இதனிடையே போர்க்குற்றவாளியான ராஜபக்சேவை இந்தியாவின் எந்தப்பகுதிக்குள்ளும் நுழைய அனுமதிக்க கூடாது என்று டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
பல்லாயிரக் கணக்கான தமிழர்களை கொடூரமான முறையில் படுகொலை செய்ததுடன், இலங்கையில் தமிழ் இனத்தையே அழித் தொழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ராஜபக்சே கைது செய்து சிறையில் அடைக்கப்பட வேண்டியவர்.இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றச்சாற்றுகள் காரணமாக இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் ராஜபக்சே நுழைய முடியாத நிலை நிலவுகிறது.
இத்தகைய சூழலில், அவரை மத்திய அரசு ஆண்டுக்கு மூன்று முறை இந்தியாவுக்கு அழைத்து, சிவப்பு கம்பள வரவேற்பு அளிப்பது தமிழர்களின் உணர்வுகளை காயப்படுத்தும் செயலாகும்.
தமிழர்களின் உணர்வுகளை சற்றும் மதிக்காமல் ராஜபக்சேவின் வருகைக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது கடுமையாக கண்டிக்கத் தக்கது. எனவே போர்க்குற்றவாளியான ராஜபக்சே இந்தியவில் நுழைய நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications