காழ்ப்புணர்ச்சியால் உயர்மட்ட பறக்கும் விரைவு சாலை திட்டத்தை முடக்கிய அதிமுக அரசு: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: சென்னையில் உயர்மட்ட பறக்கும் விரைவுசாலை திட்டத்திற்கு காழ்ப்புணர்ச்சி காரணமாக அதிமுக அரசு முட்டுக்கட்டை போட்டதால் திட்ட மிதப்பீடு அதிகமாகுவதுடன், மக்களின் வரிப்பணம் தான் வீணாகிறது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

பறக்கும் விரைவு சாலை சென்னைத் துறைமுகத்தில் இருந்து தங்கு தடையற்ற சரக்குப் பெட்டகப் போக்குவரத்திற்கு வழிவகை செய்வதற்காக சென்னைத் துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரை கூவம் ஆற்றின் ஒரு கரையோரமாக பறக்கும் விரைவுச் சாலையை அமைக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு தமிழக அரசு 22.6.2007 அன்று கொள்கை அளவில் அனுமதி வழங்கியது.

பின்னர், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கேட்டுக்கொண்டபடி, இந்த உயர்மட்ட பறக்கும் சாலையைச் சென்னை துறைமுகத்தில் இருந்து கோயம்பேடு வரை கூவம் ஆற்றின் கரையோரமாகவும், கோயம்பேட்டில் இருந்து மதுரவாயல் வரை பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையின் மேலும் அமைப்பதற்கு 7.3.2008 அன்று அனுமதி வழங்கி தமிழக அரசு ஒப்புதல் அளித்தது.

2011-ம் ஆண்டு மார்ச் திங்களில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்தத் திட்டத்தைத் தொடருவதற்கான அனுமதியையும் வழங்கிவிட்டது. திமுக ஆட்சியின்போது தொடங்கப்பட்ட மத்திய அரசின் திட்டமான சென்னை துறைமுகம்-மதுரவாயல் உயர் மட்டச்சாலை 1,815 கோடி ரூபாய் செலவிலே தொடங்கப்பட்டு அதிவேகமாக நடைபெற்று வந்ததை, அதிமுக ஆட்சியினர் பணியைத் தொடராதே என்று 2012ம் ஆண்டு மார்ச் திங்களில் தடுத்து நிறுத்திவிட்டார்கள்.

திட்டத்திற்கான அனைத்து அனுமதிகளும் முறையாக வழங்கப்பட்டு, பிரதமரே வந்து பணிகளைத் தொடங்கி வைத்த திட்டம் அது. அந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால் அரை மணி நேரத்தில் செல்லுகின்ற பயணம் ஐந்தே நிமிடங்களில் முடிவுறும்; போக்குவரத்து சுலபமடையும். ஏற்கனவே தமிழக அரசே முழுமையாக ஆய்ந்து அனுமதி கொடுத்து தொடங்கப்பட்ட திட்டம்.

இந்த விவரங்களையெல்லாம் மத்திய அரசின் துறைச் செயலாளரே தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு விரிவாக எழுதியதோடு, நேரிலும் வந்து விளக்கியிருக்கிறார். மத்திய அமைச்சரவையில் செயலாளர் டி.ஏ.கே.நாயர் பிரதமரின் அனுமதியோடு சென்னை வந்து முதல்வர்ஜெயலலிதாவிடம் இந்தத் திட்டம் விரைந்து நிறைவேற்றப்பட வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கியிருக்கிறார்.

அதற்குப் பிறகும் சென்னைத் துறைமுகம்- மதுரவாயல் உயர் மட்ட விரைவுச் சாலைப் பணியினையும் அதிமுக அரசு முடக்கிப் போட்டுள்ளது. சுமார் ஓராண்டு காலமாக இந்தத் திட்டத்திற்கு அதிமுக அரசு நியாயமான அடிப்படை எதுவுமின்றி, முட்டுக்கட்டை போட்ட காரணத்தினால் திட்ட மதிப்பீடும் அதிகமாகி, பொதுமக்களின் வரிப்பணம் விரயமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் பணிகள் நிறைவேற்றப்பட்டு வந்த இடத்தில் எல்லாம் புல், பூண்டுகள் முளைத்துவிட்டன. இந்த முக்கியமான திட்டத்திற்கு அதிமுக அரசு தடங்கலாக இருந்ததின் காரணமாக மக்களிடையே எதிர்ப்பு நாளுக்குநாள் அதிகமானதால் தமிழக அரசு தன் முடிவினை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தைப் பொறுத்தவரை; தமிழக அரசோடு செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு மாறாக எதுவும் செய்யப்படவில்லை என்பதில் உறுதியாக இருக்கிறது. இந்தத் திட்டத்திற்காக 500 கோடி ரூபாய் அளவிற்கு செலவுகள் செய்யப்பட்டு; இருபது சதவீதப் பணிகள் முற்றுப் பெற்றுள்ளன.

அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு, இதுபோன்ற பல திட்டங்கள் காழ்ப்புணர்ச்சி காரணமாக முடக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மக்களின் வரிப்பணம்தான் விரயமாக்கப்படுகிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+