ரூ.1,500 லஞ்சம்: தென்காசி பில் கலெக்டர் கைது
தென்காசி: தென்காசியில் வீட்டு தீர்வைக்கு பெயர் மாற்றம் செய்வதற்காக ரூ.1500 லஞ்சம் கேட்ட பில் கலெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
தென்காசி தைக்கா தெருவை சேர்ந்தவர் கணேசன். இவர் அப்பகுதியில் பழைய வீடு ஒன்றினை விலைக்கு வாங்கியுள்ளார். வாங்கிய வீட்டை புதுப்பித்து தனது பெயருக்கு மாற்றம் செய்ய நகராட்சியில் மனுவையும் அளித்துள்ளார்.
ஒருமாதமாக இழுத்தடிக்கப்பட்ட நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் சம்பந்தப்பட்ட பகுதி பில் கலெக்டர் மாரியப்பனிடம் சென்று விபரம் கேட்டுள்ளார். அதற்கு மாரியப்பன் ரூ.1500 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து நெல்லை லஞ்ச ஓழிப்பு போலீசில் கணேசன் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து டிஎஸ்பி தங்கசாமி, இன்ஸ்பெக்டர் கந்தசாமி ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று இரவில் கணேசனிடம் ரசாயனம் தடவிய பணம் ரூ.1500ஐ கொடுத்து அனுப்பினர். அந்த பணத்தை பில் கலெக்டர் மாரியப்பன் பெற்றபோது நகராட்சி அலுவலகத்திற்குள் நுழைந்த லஞ்ச ஓழிப்பு துறையினர் மாரியப்பனை பிடித்து கைது செய்தனர்.
வீட்டு தீர்வைக்கு பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய ஊழியர் கைது செய்யப்பட்ட சம்பவம் தென்காசியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.